டெல்லி சட்டசபை சிறப்பு கூட்டம்- கெஜ்ரிவால் அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் இன்று தாக்கல்
டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்களை வளைத்து ஆட்சியை கலைக்க பாஜக சதி செய்வதாக புகார் கூறப்பட்டு வரும் நிலையில் இன்று டெல்லி யூனியன் பிரதேச சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக சதி செய்கிறது என்பது புகார். டெல்லி அமைச்சர்கள் மீது சிபிஐ, அமலாக்கப் பிரிவு வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பழிவாங்கும் செயல் என்கிறது ஆம் ஆத்மி.

மேலும் தாம் ஆம் ஆத்மி கட்சியை இரண்டாக உடைத்து கணிசமான எம்.எல்.ஏக்களுடன் பாஜகவில் சேர்ந்தால் முதல்வர் பதவி தருவதாக பேரம் பேசுகின்றனர் என துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பரபரப்பான புகார் கூறியிருந்தார். மேலும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுக்கு தலா ரூ20 கோடி பேரம் பேசுகிறது பாஜக எனவும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தாவது: பாஜகவின் ஆபரேஷன் தாமரை டெல்லியில் தோல்வி அடைந்துவிட்டது. பாஜகவின் இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வி என்பதை மக்களிடத்தில் நாங்கள் நிரூபிப்போம். டெல்லி சட்டசபையில் எங்களது அரசு மீதான பெரும்பான்மையை மீண்டும் நிரூபிப்போம். இவ்வாறு கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
இந்நிலையில் டெல்லி சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று கெஜ்ரிவால் அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்கிறது. ஆனால் பாஜகவோ, மது ஊழல் விவகாரத்தை திசை திருப்பத்தான் ஆம் ஆத்மி இத்தகைய நாடகத்தை நடத்தி வருகிறது என கடுமையாக விமர்சித்தும் வருகிறது.
70 எம்.எல்.ஏக்களைக் கொண்ட டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் 62 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பாஜகவுக்கு 8 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர்.












Click it and Unblock the Notifications