இது தற்கொலை படை தாக்குதல் தான்.. டெல்லி கார் வெடிப்பில் என்ஐஏ வெளியிட்ட ஷாக் அறிக்கை.. பின்னணி
டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு தற்கொலை படை தாக்குதல் தான் என்பதை என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலையத்தில் 1வது நுழைவு வாயிலில் கடந்த 10ம் தேதி மாலை 6.52 மணிக்கு சென்று கொண்டிருந்த ஹூண்டாய் ஐ20 கார் வெடித்து சிதறியது. இதில் டூவீலர்கள், கார்கள், மின்சார வாகனம் என்று 13 வாகனங்கள் எரிந்தன. இந்த கார் வெடிப்பில் 10 பேர் பலியாகினர். 32 பேர் காயமடைந்தனர்.

மேலும் காரை ஓட்டிய வந்தவன் உடல் சிதறி இறந்து கிடந்தான். இந்த கார் வெடிப்பு சம்பவம் நாட்டையை அதிர வைத்தது. இதன் பின்னணியில் பயங்கரவாத சதி இருக்கலாம் என்ற சந்தேகம் வந்தது. இதனால் டெல்லி போலீசார் ‛உபா' சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விசாரணையில் என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைகோர்த்தனர்.
முதற்கட்டமாக காரில் இறந்து கிடந்தவன் யார்? என விசாரிக்கப்பட்டது. அப்போது அவன் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த உமர் உன் நபி என்பதும், டாக்டரான இவன் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. அதோடு அவனது உடலின் டிஎன்ஏவும், குடும்பத்தினரின் டிஎன்ஏவும் ஒத்துப்போனது. இதனால் கார் வெடிப்பை நிகழ்த்தியது உமர் தான் என்பது உறுதியானது.
இந்நிலையில் தான் டெல்லி கார் வெடிப்பு தொடர்பாக என்ஏஐ எனும் தேசிய புலனாய்வு முகமை சார்பில் இன்று மாலையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கார் வெடிப்பு தொடர்பாக முக்கிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்த வழக்கில் என்ஐஏ காஷ்மீரை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளது. இவன் தற்கொலை தாக்குதல் நடத்தி 10 பேரை கொன்று, 32 பேரை காயமடைய வைத்தவனுக்கு சதியுடன் உதவி செய்துள்ளான். கைதானவனின் பெயர் அமீர் ரஷித் அலி. இவனது பெயரில் தான் அந்த கார் பதிவு செய்யப்பட்டள்ளது.
டெல்லியில் பதுங்கியிருந்தபோது அவனை கைது செய்தோம். டெல்லி போலீசார் பதிவு செய்த வழக்கு தொடர்பாக நாடு முழுவதும் தீவிரமாக சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையின் ஒருபகுதியாக அமீர் ரஷித் அலியை கைது செய்துள்ளோம்.
என்ஐஏ விசாரணையில் அவன் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவன். அங்குள்ள பம்பூர் அரகே உள்ள சம்பூரா கிராமத்தை சேர்ந்தவன். இவன் தற்கொலை தாக்குதல் நடத்திய உமர் உன் நபியுடன் சேர்ந்து பயங்கரவாத தாக்குதலுக்கான சதிவேலையில் ஈடுபட்டுள்ளான்.
ஐஇடி வகை குண்டு வெடிப்பை நிகழ்த்துவதற்கான காரை வாங்குவதற்காகவே அவன் டெல்லி வந்துள்ளான். கார் வெடிக்க செய்த இறந்த நபர் உமர் உன் நபி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவன் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்தவன். ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள அல் பலா பல்கலைக்கழகத்தில் ஜெனரல் மெடிஷின் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தான்.
உமருக்கு சொந்தமான இன்னொரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த கார் வழக்குக்கான ஆதாரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக மொத்தம் 73 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. இதில் காயமடைந்தவர்களும் அடங்குவர்.
டெல்லி, ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் பிற சகோதர விசாரணை அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். வழக்கு தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். குண்டுவெடிப்புக்கு பின்னால் உள்ள பெரிய சதியை வெளியே கொண்டு வரவும், வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை அடையாளம் காணவும் இந்த விசாரணை தொடர்ந்து வருகிறது'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications