டெல்லியில் அமைச்சர்களாகும் அதிஷி , சௌரப் பரத்வாஜ்? கெஜ்ரிவால் எடுத்த புதிய முடிவு
டெல்லி: டெல்லியில் புதிய அமைச்சர்களாக ஆம் ஆமி எம்எல்ஏக்கள் அதிஷி மற்றும் சௌரப் பரத்வாஜ் ஆகியோர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துணைநிலை ஆளுநருக்கு இருவரின் பெயரையும் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. கெஜ்ரிவால் எந்த துறையையும் ஏற்கவில்லை. மாறாக எல்லா துறைகளையும் மற்ற அமைச்சர்களே வகித்து வருகிறார்கள்.
டெல்லி அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கல்வி முதல் கலால் வரை 18 துறைகளை தன் கைவசம் வைத்திருந்தார். அண்மையில் அவரை சிபிஐ அண்மையில் கைது செய்தது. கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை கெஜ்ரிவால் அரசு அமல்படுத்தியதில் அரசுக்கு ரூ.2,800 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிபிஐ குற்றம்சாட்டியது. இதற்கு மணீஷ் சிசோடியா வழங்கிய அனுமதி தான் காரணம் என்று சிபிஐ குற்றம்சாட்டி உள்ளது. இந்த ஊழல் விவகாரத்தில் இதுவரை 36 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

கறுப்பு பணம்
முன்னதாக ஆம் ஆத்மி அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின், பண மோசடி வழக்கில் கடந்த ஆண்டு மே 30-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் ரூ.16.39 கோடி கறுப்பு பணத்தை பரிமாற்றம் செய்திருப்பதாகவும், ஹவாலா மோசடிக்காக 54 போலி நிறுவனங்களை நடத்தியதாகவும் அமலாக்கத்துறை அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்திருக்கிறது. இவர் கடந்த 9 மாதங்களாக டெல்லி சிறையில் இருக்கிறார்.

சத்யேந்தர் ஜெயின்
இதனிடையே மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் தங்களது அமைச்சர் பதவியை அண்மையில் ராஜினாமா செய்தனர். இவர்கள் ராஜினாமா கடிதங்களை அண்மையில் அனுப்பி வைத்தனர். இதனிடையே காலியாக உள்ள இரண்டு பதவிகளுக்கும் புதிய அமைச்சர்களை நியமனம் செய்ய கெஜ்ரிவால் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் டெல்லி மாநிலத்தின் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

ஆளுநருக்கு அனுப்பிவைப்பு
இதில், அமைச்சர்களாக்க ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அதிஷி மற்றும் சௌரப் பரத்வாஜ் ஆகியோரின் பெயர்களை அமைச்சர்களாக்க கெஜ்ரிவால் பரிந்துரைத்துள்ளார். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துணைநிலை ஆளுநர் விகே சக்ஸேனாவிற்கு இருவரின் பெயரையும் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமாக இருவரும் பதவியேற்கும் நாள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்..

சவுரவ்க்கு உள்துறை
கல்வி, தொழிலாளர் மற்றும் சுற்றுலா போன்ற முக்கிய துறைகளை அதிஷி கையாளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் சவுரப் பரத்வாஜுக்கு பொதுப்பணித்துறை மற்றும் மின்சாரம் மற்றும் உள்துறை துறைகள் ஒதுக்கப்படும் என டெல்லி மாநில ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications