டெல்லியை கதிகலங்க வைத்த சதி.. இந்தியாவில் ஹமாஸ் ஸ்டைல்! பிளான் பி-ஐ செயல்படுத்தியது ஏன்? பரபர தகவல்!
டெல்லி: இந்தியாவையே பரபரப்புக்குள்ளாக்கிய டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு சாதாரண தாக்குதல் அல்ல, இதற்கு பின்னால் ஹமாஸ் பாணியில் ட்ரோன் மற்றும் ராக்கெட்டுகளை பயன்படுத்தி பெருமளவு உயிரிழப்பு ஏற்படுத்தும் திட்டம் இருந்ததாக தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்துக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டப்பட்டதற்கான ஆதாரங்களும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 10ஆம் தேதி மாலை 6.50 மணியளவில். செங்கோட்டை பகுதியின் கவுரி சங்கர், ஜெயின் கோவில்கள் அருகே மெதுவாக சென்ற கார் ஒன்று சிக்னலில் நின்றது. சில வினாடிகளில் அது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அருகே இருந்த கார்கள் 150 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன.
இந்த விபத்தில் கார் அருகே நின்றிருந்தவர்கள், நடைபாதையில் சென்றவர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுடன் படுகாயமடைந்தனர். இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவம்.

டெல்லி கார் வெடிப்பு
இந்த சம்பவம் ஒரு தீவிரவாத தாக்குதல் என மத்திய அரசு கூறியுள்ள நிலையில், டெல்லி போலீஸ், தேசிய புலனாய்வுத் துறை (NIA), தேசிய பாதுகாப்புப் படை (NSG) ஆகியவை இணைந்து சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில், டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு சாதாரண தாக்குதல் அல்ல, இதற்கு பின்னால் ஹமாஸ் பாணியில் ட்ரோன் மற்றும் ராக்கெட்டுகளை பயன்படுத்தி பெருமளவு உயிரிழப்பு ஏற்படுத்தும் திட்டம் இருந்ததாக தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
என்.ஐ.ஏ விசாரணை
இதுதொடர்பாக தேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி," டெல்லி கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து என்ஐஏ தீவிரமாக கண்காணித்து வந்தது. அதில் தொடர்புடையவர்கள் படித்ததாகச் சொல்லப்படும் அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் கூட சோதனைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து இந்த தாக்குதலுக்காக காரை வாங்க உதவியதுடன், சம்பவத்துக்கு முக்கிய ஆதரவளித்ததாக அமீர் ரஷீத் அலி என்ற மருத்துவ மாணவர் கைது செய்யப்பட்டார்.
தீவிரவாத சதி
இதையடுத்து தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், காசிகுண்டைச் சேர்ந்த 20 வயது ஜசிர் பிலால் வானி என்று அழைக்கப்படும் டேனிஷ், என்ஐஏ வலையில் சிக்கினார். இவர்தான் இந்த தாக்குதலின் தொழில்நுட்ப ரீதியாக உதவி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜசிர் பிலால் வானி குறித்து பல அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளன. இவர், ட்ரோன்களை இயக்க பயிற்சி பெற்றவர் என்பதோடு, ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் தயாரிப்பதில் நிபுணர் எனவும், டெல்லி கார் குண்டு வெடிப்பு சதிக்கு தொழில்நுட்ப ஆதரவு வழங்கியவர் எனவும் கூறப்படுகிறது. இவரது உதவியுடன், பெரிய தாக்குதல் நடத்தும் முயற்சியில் பயங்கரவாதிகள் இருந்ததாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
ஹமாஸ் பாணி தாக்குதல்
மேலும், ஹமாஸ் பாணியில் மக்கள் அதிகம் கூடிய இடங்களை குறிவைத்து ட்ரோன் மூலம் வெடிபொருட்களை வீசி தாக்குவது, ராக்கெட் லாஞ்சர்கள், சிறிய வகை ஏவுகணைகளை ஏவி மக்களைக் கொல்லுதல் என 'ஹமாஸ் ஸ்டைல்' தாக்குதலை இந்தியாவில் உருவாக்க முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையி இந்த திட்டம் தொழில்நுட்ப காரணங்களாலும், உளவு துறையின் கண்காணிப்பாலும் செயல்பட முடியாத நிலைக்கு சென்றதால், டெல்லியில் கார் குண்டு வெடிப்பை மாற்றுத் திட்டமாக செயல்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications