காய்ச்சல், தொண்டை வலி.. தனிமையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.. நாளை கொரோனா டெஸ்ட்
டெல்லி: தொண்டைவலி, காய்ச்சல் உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டு வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். நாளை அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
டெல்லி நகரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்வதால் அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.

இந்த நிலையில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லை. தொண்டைவலி, காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் அவருக்கு உள்ளது. இதை அடுத்து அவர் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறார்.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாளை அவருக்கு அது சார்ந்த பரிசோதனைகள் எடுக்கப்பட உள்ளது. இந்தியாவில் முதல்வர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை ஏற்பட்டது கிடையாது. அந்த வகையில் அரவிந்த் கெஜ்ரிவால் உடல் நிலையில் காணப்படும், அறிகுறிகள் கொரோனா வைரஸ் பாதிப்புடன் ஒத்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
அவர் ஏற்கனவே ஜலதோஷம் பிரச்சனையால் அவதிப்படுபவர். கர்நாடக மாநிலத்தில் உள்ள இயற்கை வைத்தியசாலையில் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்று சென்ற மருத்துவ வரலாறு அவருக்கு இருக்கிறது. எனவே உடனடியாக அவருக்கு பரிசோதனை செய்து சிகிச்சைகளை ஆரம்பிக்க வேண்டியது அவசியம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications