கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்ய போகிறது.. ஆம் ஆத்மி தலைவர்கள் ட்விட்.. போலீஸ் குவிப்பு! பரபரப்பு
டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை சம்மனை ஏற்று விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில், இன்று அவர் கைது செய்யப்படலாம் என்று ஆம் ஆத்மி தலைவர்கள் கூறி வருகிறார்கள்.
டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். கடந்த 2021 -ம் ஆண்டு நவம்பரில் அங்கு புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இந்த புதுமான கொள்கையின் படி 32 மண்டலங்களாக டெல்லியை பிரித்து 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

இதில், ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. அதாவது, மதுபான கொள்கையில் இருந்த வரிக் குறைப்பு போன்ற முக்கிய சலுகைகள் குறித்த விபரங்கள் முன்கூட்டியே கசிய விடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் மூலம் மதுபான ஆலை அதிபர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியதாக புகார்கள் எழுந்தன.
கெஜ்ரிவாலுக்கு சம்மன்: இதையடுத்து ஆளுநர் விகே சக்சேனா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். சிபிஐ விசாரணை தொடங்கிய நிலையில் டெல்லி அரசு புதிய மதுபான கொள்கையை திரும்ப பெற்றது.அப்போது டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழலில் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றங்கள் நடந்தது, இந்த ஊழல் மூலம் கிடைக்கும் பணத்தை தேர்தலுக்கு ஆம்ஆத்மி கட்சி பயன்படுத்தியதையும் சிபிஐ குற்றம் சாட்டியது.
தொடர்ந்து இந்த அமலாக்கத்துறையும் இந்த வழக்கை கையில் எடுத்தது. இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்தூறை சம்மன் அனுப்பியது. ஆனால் தேர்தல் பிரசாரத்தை காரணம் காட்டி கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இதையடுத்து கடந்த 21 ஆம் தேதி கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
ஆஜர் ஆகவில்லை: இதற்கும் கெஜ்ரிவால் ஆஜர் ஆகவில்லை. மூன்றாவது முறையாக நேற்று ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால், அமலாக்கத்துறை சம்மனில் தெளிவான விவரங்கள் இல்லை என்றும் சாட்சியாக கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதா.. அல்லது குற்றச்சாட்டப்பட்டவராக சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறதா என்ற விவரங்கள் இல்லை என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது.
கைது செய்யப்படலாம்: கெஜ்ரிவால் சம்மனை ஏற்று ஆஜராகவில்லை. இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம் என்று ஆம் ஆத்மி தலைவர்கள் பலரும் தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு இருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான ஆதிஷி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் இன்று காலை அமலாக்கத்துறை ரெய்டு நடத்தக்கூடும். சோதனைக்கு பிறகு கெஜ்ரிவால் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது" என்று பதிவிட்டு உள்ளார்.
போலீஸ் குவிப்பு: இந்த நிலையில், டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அனுப்பிய 3-வது சம்மனையும் கெஜ்ரிவால் வாங்க மறுத்துள்ளதால், அவரது இல்லம் முன்பு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி அமைச்சர் கூறிய நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications