நாங்க ரெடி! முதல் ஆளாக ஸ்டாலினுடன் கைகோர்த்த கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு எதிரான ‘அதிரடி’ மூவுக்கு ஆதரவு!
டெல்லி : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை முதல் ஆளாக ஏற்று கடிதம் எழுதியுள்ளார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆளுநருக்கு எதிராக டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதாக ஸ்டானிடம் உறுதி அளித்துள்ளார் கெஜ்ரிவால்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வந்த நிலையில், ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் வழங்க மாநில ஆளுநர்களுக்கு மத்திய அரசு, குடியரசுத் தலைவர் தகுந்த அறிவுரை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றினார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். இது தொடர்பாக பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

அந்தந்த மாநில சட்டமன்றங்களில், மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்யுமாறு மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், இதன் மூலம் மாநில அரசுகளின் இறையாண்மையை நிலைநிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார் ஸ்டாலின்.

மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் சில மாநில ஆளுநர்கள் காலவரையின்றி நிலுவையில் வைத்திருப்பதால் அந்தந்த மாநில நிர்வாக செயல்பாடுகள் முடங்கிப் போயிருப்பதையும் முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதியுள்ளார் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால். அதில், டெல்லி சட்டசபையிலும் இதுபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதாகத் தெரிவித்துள்ளார்.

கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில், பாஜக அல்லாத மாநில அரசுகளின் அதிகாரங்களை அபகரிக்கும் மத்திய அரசு மற்றும் அதன் பிரதிநிதிகளின் நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம். நாங்கள் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கிறோம்.
மாநில ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் தங்கள் பணிகளைச் செய்வதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை டெல்லி சட்டசபையில் வரவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்றுவோம் எனத் தெரிவித்துள்ளார் கெஜ்ரிவால்.












Click it and Unblock the Notifications