தாக்குதல் எதிரொலி.. டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு!
டெல்லி: டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா வீட்டில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் பொதுமக்கள் பலர் மனுக்களை கொடுத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.
நேற்று ரேகா குப்தா வீட்டில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ரேகா குப்தாவின் தலைமுடியை பிடித்து இழுத்து கன்னத்தில் கடுமையாக தாக்கியிருந்தார்.

இதை பார்த்து அதிர்ந்த காவலர்கள் உடனடியாக அந்த நபரிடமிருந்து ரேகா குப்தாவை மீட்டனர். காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரேகா குப்தா சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பல்வேறு அரசியல் தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் 41 வயதான ராஜேஷ் கிம்ஜி என்றும், இவர் குஜராத்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. இவர் நாய் ஆர்வலர் என சொல்லப்படுகிறது.
தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டபோது, தெரு நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுக்கு முதலமைச்சர் ரேகா குப்தா வரவேற்பு தெரிவித்திருந்தார். எனவே உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்திருந்ததால் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்நிலையில் ரேகா குப்தாவின் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. உத்தரவை அடுத்து இன்று காலை முதல் ரேகா குப்தா வீட்டில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications