காங்கிரசுக்கு பின்னடைவு.. டெல்லி மாநில தலைவர் ராஜினாமா! கார்கேவுக்கு பறந்த பரபர லெட்டர்! என்ன காரணம்
டெல்லி: லோக்சபா தேர்தல் நடந்து வரும் சூழலில், டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.. அவரது ராஜினாமாவுக்கு என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், இன்னும் 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அரவிந்தர் சிங் லவ்லி: பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் இந்த முறை மோதல் நிலவுகிறது. இதற்கிடையே டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அவர் தனது ராஜினிமா கடிதத்தையும் அனுப்பி உள்ளார்..
டெல்லி காங்கிரஸ் தலைவராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அர்விந்தர் சிங் லவ்லி நியமிக்கப்பட்டார். இப்போது ஓராண்டிற்குள் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர்கள் தன்னை மீறி மாநிலத்தில் நடவடிக்கைகளை எடுப்பதாகவும் இதனால் தன்னால் சுதந்திரமாகச் செயல்பட முடிவதில்லை என்றும் லவ்லி தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ராஜினாமா: டெல்லிக்கான காங்கிரஸ் பொதுச் செயலாளர் தீபக் பபாரியா மாநில விவகாரங்களில் தொடர்ந்து தலையிடுவதாகவும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார் .. பாபரியாவின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிக்கும் நிர்வாகிகளைக் கட்சியில் இருந்தே நீக்க வேண்டும் என்ற அழுத்தமும் தனக்கு கொடுக்கப்படுவதாக லவ்லி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
என்ன காரணம்: மேலும் அவர் தனது ராஜினாமா கடிதத்தில், "காங்கிரஸ் கட்சி மீது பொய்யான, தவறான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியே உருவான கட்சி தான் ஆம் ஆத்மி.. அவர்களுடன் கூட்டணி அமைக்க டெல்லி காங்கிரஸ் யூனிட் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தது.. காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இந்தக் கூட்டணி பாதிக்கும். இது கூட பரவாயில்லை கட்சி முடிவு என ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால், டெல்லிக்கு தொடர்பே இல்லாதவர்களை டெல்லியில் போட்டியிட வேட்பாளராக அறிவித்துள்ளனர். அதில் குறிப்பாக வடகிழக்கு டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கன்னையா குமார், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை வெளிப்படையாகவே பாராட்டுகிறார். இது உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
யார் இவர்: டெல்லி முதல்வராக ஷீலா தீட்சித் இருந்த போது இந்த அர்விந்தர் சிங் லவ்லி அமைச்சராக இருந்துள்ளார். இருப்பினும், 2017 ஏப்ரல் மாதம் அவர், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமானார். இருப்பினும், வெறும் 9 மாதங்கள் மட்டுமே அவர் பாஜகவில் இருந்தார். 2018 பிப்ரவரியில் அவர் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
ஆம் ஆத்மி காங்கிரஸ் கூட்டணி: ஆம் ஆத்மியும் காங்கிரஸும் பல ஆண்டுகளாகவே எதிரும் புதிருமாகவே இருந்தன. ஆனால், இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற காரணத்திற்காக இரு கட்சிகளும் இந்தியா கூட்டணியில் வந்தார்கள். டெல்லியில் அவர்கள் கூட்டணி அமைத்த நிலையில், அங்குள்ள 7 தொகுதிகளில் ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று முடிவெடுக்கப்பட்டது
அதன்படி மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி, கிழக்கு டெல்லி மற்றும் புது டெல்லி ஆகிய 4 தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது. மீதமுள்ள மூன்று தொகுதிகள்- வடகிழக்கு டெல்லி, வடமேற்கு டெல்லி மற்றும் சாந்தினி சௌக் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது..












Click it and Unblock the Notifications