டெல்லி மாநகராட்சி தேர்தல்! உலகின் மிகப்பெரிய கட்சியை தோற்கடித்துள்ளோம்! மணீஷ் சிசோடியா பெருமிதம்!
டெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தலில் உலகின் மிகப்பெரிய கட்சியை தோற்கடித்துள்ளோம் என பாஜக குறித்து கூறியுள்ளார் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா.
இதனை மிகப்பெரிய வெற்றியாக மட்டும் பார்க்காமல் மிகப்பெரிய பொறுப்பாகவும் தாம் பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
இனி அனைவரும் ஒருங்கிணைந்து தூய்மையான மற்றும் அழகான டெல்லியை உருவாக்குவோம் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி மாநகராட்சியில் ஆம்ஆத்மி அமோக வெற்றி! பாஜக தோல்வி.. பலித்துபோன தேர்தல் கருத்து கணிப்பு!
மாநகராட்சி தேர்தல்
டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜகவை வீழ்த்தியுள்ளதன் மூலம் நாடு தழுவிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. காங்கிரஸ் வெறும் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில் ஆம் ஆத்மி தனிப் பெரும்பான்மையோடு வெற்றியை ஈட்டியுள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, உலகின் மிகப்பெரிய கட்சியை தோற்கடித்துள்ளோம் என பாஜக குறித்து கூறியுள்ளார்.
வெற்றியல்ல பொறுப்பு
மேலும் டெல்லி மாநகராட்சி தேர்தல் வெற்றியை வெறும் வெற்றியாக மட்டும் பார்க்காமல் பொறுப்பாக பார்ப்பதாக கூறியிருக்கிறார். இதனிடையே டெல்லி மக்களுக்கு நன்றி கூறியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அனைவரும் ஒருங்கிணைந்து தூய்மையான மற்றும் அழகான டெல்லியை உருவாக்குவோம் என அழைப்பு விடுத்துள்ளார்.
அண்ணாமலை பிரச்சாரம்
டெல்லி மாநகராட்சித் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 3 நாட்கள் பிரச்சாரம் மேற்கொண்டார். குறிப்பாக தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் தமிழக பாஜக முக்கிய பிரமுகர்கள் பலர் முகாமிட்டு பரப்புரை செய்தனர். ஆனால் எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்பது தேர்தல் முடிவுகளின் மூலம் தெரியவருகிறது.
காங்கிரஸ் நிலைமை
காங்கிரஸ் நிலைமையோ இன்னும் பரிதாபமாக உள்ளது. இத்தனைக்கும் கேரளா, கர்நாடகா, தமிழகம் என பல மாநிலங்களில் இருந்து காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டு தேர்தல் பணிகளை கவனித்தனர். மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் அகில இந்திய தலைவராக பொறுப்பேற்ற பின்னர் சந்தித்த முதல் தேர்தலிலேயே கட்சி தோல்வியை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.