"அந்த 3 வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியல!" கெஜ்ரிவால் உருக்கம்! டெல்லி மக்களிடம் வைத்த கோரிக்கை
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கு கெஜ்ரிவால் தீவிரமாகப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். இதற்கிடையே தான் அளித்த வாக்குறுதிகளில் மூன்று முக்கிய வாக்குறுதிகளை தன்னால் நிறைவேற்ற முடியவில்லை என்பதை கெஜ்ரிவால் ஒப்புக்கொண்டு இருக்கிறார். இது தொடர்பாக டெல்லி மக்களிடம் அவர் உருக்கமாகப் பேசினார்.
டெல்லியில் வரும் பிப்ரவரி மாதம் 5ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், அங்குப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

அங்குக் கடந்த 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ள சூழலில், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்பில் ஆம் ஆத்மி களமிறங்குகிறது. இதற்காக அக்கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் அங்குத் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
3 வாக்குறுதிகள்:
இதற்கிடையே மூன்று வாக்குறுதிகளை தன்னால் நிறைவேற்றிய முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்ட டெல்லி மாஜி முதல்வர் கெஜ்ரிவால், இந்தத் திட்டங்களை நிறைவேற்றக் கூடுதல் அவகாசம் தேவை என்று கூறினார். யமுனை நதியைச் சுத்தப்படுத்துதல், அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்குதல், ஐரோப்பியத் தரத்திற்கு இணையாக டெல்லி சாலைகளைத் தரம் உயர்த்துவது ஆகிய மூன்று வாக்குறுதிகளை மட்டும் தன்னால் நிறைவேற்ற முடியவில்லை என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.
மேலும், சட்டசபைத் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியை அமைத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் இந்த 3 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன் என்றும் தெரிவித்தார். மேலும், ஆம் ஆத்மி அரசு மற்ற வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளதாகவும் கெஜ்ரிவால் பேசினார்.
கெஜ்ரிவால் பேச்சு:
இது தொடர்பாக லக்ஷ்மி பாய் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், "நான் எனது வாக்குறுதிகளுக்கு உண்மையாக இருக்கிறேன். ஒன்று அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். அப்படி இல்லை என்றால் நானே மக்களிடம் அதை நிறைவேற்ற முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்வேன். அப்படி தான் மூன்று வாக்குறுதிகளை என்னால் நிறைவேற்ற முடியவில்லை..
முதலில் யமுனையைச் சுத்தம் செய்தல், இரண்டாவது அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவது, மூன்றாவது ஐரோப்பியச் சாலைகளுக்கு இணையாக டெல்லியின் சாலைகளை உயர்த்துவது. இந்த மூன்றை மட்டும் நிறைவேற்ற முடியவில்லை.
அடுத்த 5 ஆண்டுகளில் முடிப்போம்:
அதேநேரம் இந்த மூன்று விஷயங்களிலும் ஆம் ஆத்மி அரசு பல பணிகளைச் செய்துள்ளது. இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் யமுனை நதி சுத்தம் செய்யப்படும். ஏற்கனவே ராஜேந்திர நகர் காலணியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. நான்தான் அதைத் தொடங்கி வைத்தேன். வரும் நாட்களில் டெல்லியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகத்தைத் தொடங்குவோம். சர்வதேச தரத்தில் சாலைகளின் தரத்தை உயர்த்தும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த 3 பணிகளுமே அடுத்த ஐந்து ஆண்டுகளில் முடிக்கப்படும்.
2014ம் ஆண்டு கோடைக் காலத்தில் டெல்லியில் 10 மணி நேரம் வரை மின்வெட்டு இருந்தது. ஆனால், இப்போது டெல்லியில் 24 மணி நேரமும் மின்சாரம் தங்கு தடையில்லாமல் கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். 20 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்தாலும், அங்கு எங்கும் 24 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படுவதில்லை. ஆனால், அதை நாங்கள் செய்து காட்டியுள்ளோம். மேலும், டெல்லியில் குறைந்த விலைக்கும் மின்சாரத்தை வழங்கி வருகிறோம்.
உருக்கமான பேச்சு:
டெல்லி குழந்தைகளுக்கு நாட்டிலேயே மிகச் சிறந்த கல்வியை வழங்கியுள்ளோம். கடந்த காலங்களில் அரசுப் பள்ளிகள் மீது எந்த அரசும் கவனம் செலுத்தவில்லை. ஆனால், நாங்கள் அந்த நிலையை மாற்றினோம். அற்புதமான அரசுப் பள்ளிகளைக் கட்டியுள்ளோம். கடந்த ஆண்டு தனியார்ப் பள்ளிகள் கூட தேர்ச்சி விகிதம் 92% தான். ஆனால், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி 99.7 சதவீதமாக இருந்தது. நல்ல தரமான கல்வியை இலவசமாக வழங்குவதை விடப் பெரிய தேசபக்தி வேலை எதுவும் இல்லை என்பதை நான் தீர்க்கமாக நம்புகிறேன்" என்று உருக்கமாகப் பேசினார்.












Click it and Unblock the Notifications