விடிந்தால் டெல்லி தேர்தல் ரிசல்ட்.. அரவிந்த் கெஜ்ரிவால் சொல்லும் பகீர் ஃபார்ம் சி17 புகார்
டெல்லி: டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. நாட்டின் தலைநகர் என்பதால் இதை தேசமே உற்று நோக்கி வருகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாளே இருக்கும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஃபார்ம் 17சி தொடர்பாக தேர்தல் ஆணையம் மீது பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
டெல்லி மாநிலத்தில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. டெல்லியில் கடந்த 2014, 2015, 2020 ஆகிய மூன்று சட்டசபை தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சியில் இருந்து வருகிறது.

மத்தியில் ஆளுகின்ற, ஆண்ட பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு ஆம் ஆத்மி கடும் சவால் அளித்து வருகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பாஜகவுக்கு வாய்ப்பு அதிகம் என்றும் சில நிறுவனங்கள் பாஜக, ஆம் ஆத்மி இடையே கடுமையான போட்டி நிலவுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
நாளை வாக்கு எண்ணப்படுவதற்கு ஒரு நாளே இருக்கும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தன் எக்ஸ் தள பக்கத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அந்தப் பதிவில் அவர், "தேர்தல் ஆணையம் ஃபார்ம் 17 சி மற்றும் ஒவ்வொரு பூத்திலும் பதிவான வாக்குகளின் விபரங்களை சட்டமன்ற வாரியாக பதிவேற்ற மறுக்கிறது.
நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதை கேட்கவில்லை. ஆம் ஆத்மி கட்சி http://transparentelections.in/ என்ற இணையதளத்தில் சட்டமன்ற வாரியாக அனைத்து ஃபார்ம் 17 சி விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளோம். இதில் பூத் வாரியாக பதிவான தரவுகள் உள்ளன.
வாக்காளர்கள் இந்த விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை எல்லா இடங்களிலும் நாங்கள் பொது வெளியில் கொண்டு வருகிறோம். இதை தேர்தல் ஆணையம் செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் வெளிப்படைத்தன்மை இருந்திருக்கும். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை." என்று கூறியுள்ளார்.
Form 17C என்பது ஒவ்வொரு பூத்தில் உள்ள பூத் ஏஜென்ட் தொடங்கி பதிவான வாக்குகள் வரையிலான அனைத்து விபரங்களும் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு பூத்திலும் உள்ள மொத்த வாக்காளர்கள், பதிவான வாக்குகள், பதிவாகாத வாக்குகள், இவிஎம் இயந்திரத்தின் அடையாள எண், அதில் காட்டப்படும் வாக்குகள் விபரம் இடம் பெற்றிருக்கும்.
இதில் பூத் ஏஜென்ட்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்திடுவார். வாக்கு எண்ணிக்கையில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் கூட ஃபார்ம் 17 சி ஆய்வு செய்யப்படும். ஃபார்ம் 17 சி இரண்டு வகைப்படும். முதல் பிரிவில் பதிவான மொத்த வாக்குகள் குறித்த விபரங்கள் இடம் பெற்றிருக்கும். இதில் சம்பந்தப்பட்ட பூத்தில் உள்ள தேர்தல் அதிகாரி, பூத் ஏஜென்ட்கள் கையெழுத்திட்டிருப்பார்கள்.
அனைத்து பூத் ஏஜென்ட்களிடம் ஃபார்ம் 17 சி முதல் பிரிவு இருக்கும். ஃபார்ம் 17 சி பிரிவு என்பது வேட்பாளர்கள் வாரியாக பதிவான வாக்குகள் இடம் பெற்றிருக்கும். இது தேர்தல் அதிகாரிகள், வேட்பாளர், முதன்மை ஏஜென்ட் ஆகியோரிடம் மட்டுமே இருக்கும். இதில் வெளிப்படைத்தன்மை வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் வரை வழக்கு தொடரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications