தேர்தல் முடிவு வந்த மாலையே துப்பாக்கி சூடு.. ஆம் ஆத்மி எம்எல்ஏ வாகனம் மீது தாக்குதல்.. தொண்டர் பலி
டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ் யாதவ் சென்ற வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார்
Recommended Video
டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ் யாதவ் சென்ற வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார். டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியாகி சில மணி நேரத்தில் இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்று இருக்கிறது. டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 62 இடங்களில் வென்றுள்ளது, பாஜக 8 இடங்களில் வென்றுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.
இதன் மூலம் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் ஆட்சி அமைக்கிறார். ஆம் ஆத்மி இதை சந்தோசமாக கொண்டாடிக்கொண்டு இருந்த நேரத்தில்தான் எம்எல்ஏ சென்ற கான்வாய் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

எங்கு என்ன
ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ் யாதவ் நேற்று தேர்தல் வெற்றிக்கு பின் மாலை கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அங்கு அவர் மெஹ்ருளி பகுதியில் வழிபாடு நடத்தினார். அதன்பின் அவர் தனது தொண்டர்களுடன் மாலை திரும்பி வரும் போது, கிசர்கஞ்ச் அருகே அவரின் வாகனத்தை நோக்கி ஓடி வந்த இருவர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அங்கு சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அங்கிருந்து அவர்கள் தப்பித்து சென்றார்கள்.

ஒருவர் பலி
இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். ஒரு தொண்டர் படுகாயம் அடைந்தார். மொத்தம் 6 முறை அந்த மர்ம நபர்கள் இப்படி துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்கள். இந்த துப்பாக்கி சூடு குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட நபரை குறி வைத்து, மர்ம நபர்கள் சுட்டு இருக்கிறார்கள். இது அந்த குறிப்பிட்ட நபரை கொலை செய்ய வேண்டும் என்று போடப்பட்ட ஸ்கெட்ச் என்று போலீசார் தெரிவிக்கிறார்கள்.

கேங் வார்
இது கேங் வார் காரணமாக நிகழ்த்தப்பட்டு இருக்கலாம். இந்த துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட நபர், ஏற்கனவே வேறு ஒரு குழு மீது துப்பாக்கி சூடு நடத்தியவர். அதற்கு பழிவாங்கும் விதமாக இப்படி நடந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவிக்கிறார்கள். இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை. ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ் யாதவ் மெஹ்ருளி தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், இந்த துப்பாக்கி சூடு ஏன் நடந்தது என்று தெரியவில்லை.

இரங்கல்
இறந்தவரின் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எப்படி இது நடந்தது என்றும் புரியவில்லை. மிகவும் வருத்தமாக இருக்கிறது. இது மிகவும் துரதிஷ்டவசமான விஷயம். போலீஸ் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். இதில் போலீஸ் சரியான விசாரணையை நடத்தும் என்று எதிர்பார்க்கிறேன், என்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications