டெல்லி மதுபான கொள்கை முறைகேடு- சிபிஐ கைதை ரத்து செய்ய கோரி கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தம்மை சிபிஐ கைது செய்ததை ரத்து செய்யக் கோரி டெல்லி உச்சநீதிமன்றத்தில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்தார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் கெஜ்ரிவாலை சிபிஐயும் கைது செய்திருந்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்ததாக கூறி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியையும் குற்றப்பத்திரிகையில் சேர்த்தது அமலாக்கத்துறை.

இந்த நிலையில் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை ஜூன் 26-ந் தேதி சிபிஐயும் கைது செய்தது. அமலாக்கத்துறையின் வழக்கில் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் திடீரென சிபிஐ அவரை கைது செய்தது.
சிபிஐ-ன் இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதிட்டார். இதர வழக்குகளில் இருந்து கெஜ்ரிவால் வெளியே வருவதைத் தடுக்கத்தான் சிபிஐ கைது செய்திருப்பதாகவும் வாதிட்டார் அபிஷேக் மனு சிங்வி. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில், சிபிஐ கைது செய்ததற்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications