டெல்லியில் ஆட்சியமைக்கப்போவது பாஜகவும் இல்லை.. ஆம் ஆத்மியும் இல்லை- பலோடி சத்தா பஜார் கணிப்பு
டெல்லி: டெல்லி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. தலைநகர் என்பதால் இந்த தேர்தல் தேசியளவில் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. இந்நிலையில் பலோடி சத்தா நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக, ஆம் ஆத்மி ஆகிய இரண்டு கட்சிகளும் 34-36 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
தலைநகர் டெல்லி மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து 3 முறை ஆட்சியை பிடித்து காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு சவால் விடுத்தது. அதன்படி டெல்லியில் கடந்த 2014, 2015, 2020 ஆகிய மூன்று சட்டசபை தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கிறது. அதிலும் 2015 மற்றும் 2020 சட்டசபை தேர்தல்களில் ஆம் ஆத்மி தனிப்பெருபான்மையுடன் ஆட்சியை பிடித்தது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கு இன்று (5.2.2025) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்காளர்கள் காலை 7 மணி முதல் நீண்ட வரிசையில் நின்று தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர். மாலை 5 மணி நிலவரப்படி டெல்லியில் 57.7 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.
தொடர்ந்து வருகிற பிப்ரவரி 8 ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. டெல்லியில் மொத்தமுள்ள 70 சட்டசபை தொகுதிகளில் 36 தொகுதிகளில் வெற்றி பெற்றால் பெரும்பான்மை கிடைத்து ஆட்சியை பிடிக்க முடியும். இந்த தேர்தலை பொறுத்தவரை ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் மாலை 6.30 மணியில் இருந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் எனப்படும் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. பெரும்பாலான முன்னணி நிறுவனங்களின் கணிப்பின்படி பாஜகவுக்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது.
சில நிறுவனங்கள் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவுவதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் பலோடி சத்தா பஜார் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே 34-36 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் 0-1 தொகுதியில் வெற்றி பெறுவதற்கு மட்டுமே வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு தொங்கு சட்டசபை உருவாக அதிக வாய்ப்புள்ளது. அப்படி தொங்கு சட்டசபை உருவானால் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலும் அது முக்கிய பங்காற்றும் என்று கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் இந்த பலோடி சத்தா பஜார் நிறுவனத்தின் கணிப்புகள் அப்படியே நடந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி தேர்தல் தொடர்பாக இந்த நிறுவனம் ஆரம்பத்தில் ஆம் ஆத்மிக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறி வந்தது. ஆம் ஆத்மி 38-40 தொகுதிகளிலும், பாஜக 31-33 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் கூறி வந்தது. தேர்தல் நெருங்கிய நிலையில் தற்போது அவர்களின் கணிப்பிலும் மாறுபாடு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications