டெல்லி எக்ஸிட் போல்: பாஜக கனவில் மண் விழும்..4-வது முறையாக கெஜ்ரிவால் ஆட்சிதான்- ஆம் ஆத்மி நம்பிக்கை
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகளில் பெரும்பாலானவை 27 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக ஆட்சி அமையும் என தெரிவித்திருப்பதை ஏற்க முடியாது; டெல்லியில் 4-வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி அமைப்பார்; அதுதான்நடக்கும்; எக்ஸிட் போல் முடிவுகள் பொய்யாகவே அமையும் என ஆம் ஆத்மி கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி யூனியன் பிரதேச சட்டசபைக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் பிப்ரவரி 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

டெல்லி தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்தவுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளான எக்ஸிட் போல் முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டன. இதுவரை வெளியிடப்பட்ட பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக டெல்லியில் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன. டெல்லியில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 36. ஆனால் டெல்லி தேர்தலில் பாஜக 45 இடங்களை கைப்பற்ற வாய்ப்பிருப்பதாக எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன.
டெல்லியில் நடுத்தர வர்க்க வாக்காளர்கள் அதிகம்; அவர்களை குறிவைத்து பாஜக இடைவிடாது முன்னெடுத்த பிரசாரம்; வாக்குறுதிகள்; பெண்களுக்கான மாதாந்திர உதவித் தொகை ஆகியவை பாஜகவுக்கு கை கொடுக்கும் என்கிற நம்பிக்கை அக்கட்சியினருக்கு இருக்கிறது. மேலும் யமுனை நதிநீரை பாஜக நச்சாக்கிவிட்டதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனவும் கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் இந்தியா கூட்டணி கட்சிகளான ஆம் ஆத்மியும் காங்கிரஸும் பிரிந்து நின்று தேர்தலை எதிர்கொண்டதால் பாஜக எளிதாகவே வெல்லும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது என்கின்றனர் தேர்தல் வியூக வல்லுநர்கள்.
ஆனால் எக்ஸிட் போல் முடிவுகளை ஒருபோதும் ஏற்க முடியாது; எக்ஸிட் போல் முடிவுகள் பொதுவாக பொய்யாகவே அமைந்துவிடுகின்றன; டெல்லியில் 4-வது முறையாக ஆம் ஆத்மி ஆட்சியை அரவிந்த் கெஜ்ரிவால் அமைப்பார்; டெல்லி தேர்தல் களத்தில் ஹாட்ரிக் வெற்றியை ஆம் ஆத்மி அறுவடை செய்யும் என்கின்றனர் அக்கட்சி தலைவர்கள்.
அதேநேரத்தில் 2015, 2020-ல் நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தல்களின் போது வெளியிடப்பட்ட எக்ஸிட் போல் முடிவுகளில் பெரும்பான்மையானவை, ஆம் ஆத்மிதான் ஆட்சி அமைக்கும் என கணித்திருந்தன. அதே போல ஆம் ஆத்மியும் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications