டெல்லி குளிரில் 30வது நாளாக போராடும் விவசாயிகள் : பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு மீண்டும் அழைப்பு
விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம் நாளுக்குநாள் வலுவடைந்துகொண்டிருக்கிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த 30வது நாளாக போராடி வருகின்றனர்.
டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி அமைப்பு உள்ளிட்டவற்றுக்கு பாதகமாக அமைந்திருப்பதாக கூறி விவசாயிகள் டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் 30வது நாளை எட்டியுள்ளது. போராடும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு மீண்டும் அழைப்பு விடுத்து உள்ளது.
டெல்லியின் எல்லைப்பகுதிகளான சிங்கு, திக்ரி ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் நான்கு வாரங்களாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், மேலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து டெல்லியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி அமைப்பு உள்ளிட்டவற்றுக்கு பாதகமாக அமைந்திருக்கிறது என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாகும். இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பது போராடும் விவசாயிகளின் ஒரே கோரிக்கையாகும்.
சுமார் 40 அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டம் 30வது நாளை எட்டியுள்ள நிலையில், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு மத்திய அரசு தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் நடந்த 5 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடிவுற்றன. ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை ரத்துசெய்யப்பட்டது.
அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு அரசு அழைப்பு விடுத்து வருகிறது. அதே நேரத்தில் உறுதியான பரிந்துரைகள் இருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என விவசாயிகள் நேற்று பதில் கடிதம் எழுதியுள்ளனர். இந்த சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதிலேயே அரசு நிலையாக இருப்பது அர்த்தமற்றது எனவும் விவசாயிகள் அதில் கூறியுள்ளனர்.
இதனிடையே விவசாயிகளின் இந்த கடிதத்துக்கு வேளாண் துறை இணை செயலாளர் விவேக் அகர்வால் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மீண்டும் அவர் அழைப்பு விடுத்து உள்ளார்.
அந்த கடிதத்தில், வேளாண் சட்டங்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க அரசு திறந்த மனதுடன் தயாராக இருக்கிறது. எனவே பேச்சுவார்த்தைக்கு வருமாறு மீண்டும் நான் அழைப்பு விடுக்கிறேன். அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்காக ஒரு நாளும் நேரத்தையும் தயவுகூர்ந்து அறிவியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச ஆதரவு விலையை பொறுத்தவரை, வேளாண் சட்டங்களுக்கும் விலை வரம்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அல்லது நிர்ணயிக்கப்பட்ட விலையில் கொள்முதல் செய்வதில் எந்த தாக்கத்தையும் இந்த சட்டங்கள் ஏற்படுத்தாது. இதை ஒவ்வொரு பேச்சுவார்த்தையின்போதும், விவசாய அமைப்புகளிடம் கூறியிருக்கிறோம். அத்துடன் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிக்கவும் அரசு தயாராக உள்ளது.
எனவே வேளாண் சட்ட வரம்புக்குள் வராத குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான எத்தகைய கோரிக்கையும் தர்க்க ரீதியாக சரியானது அல்ல. அரசு ஏற்கனவே அறிவித்தது போல, விவசாய அமைப்புகள் எழுப்பியிருக்கும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசுவதற்கு அரசு தயாராக இருக்கிறது. இதில் தர்க்கரீதியான தீர்வு காண்பதற்கு அரசு தயாராக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications