“டெல்லி சலோ”.. போராட்ட மைதானத்தை சிறையாக மாற்றி விவசாயிகளை கைது செய்ய திட்டம்! நோ சொன்ன டெல்லி அரசு
டெல்லி: விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடும் பவானா மைதானத்தை திறந்தவெளி சிறைச் சாலையாக மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் பரிந்துரையை டெல்லி அரசு ஏற்க மறுத்து இருக்கிறது.
விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய நாடாளுமன்றத்தில் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி “டெல்லி சலோ” என்ற பெயரில் இன்று மாபெரும் போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுக்கின்றன. டெல்லி பவானா மைதானத்தில் நடைபெறும் இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லியை நோக்கி வருகை தந்து உள்ளார்கள்.

3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தை போன்று இந்த தொடர் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்து உள்ளார்கள். இதில் கிசான் மஜ்தூர் மோர்ச்சா, சம்யுக்தா கிசான் மோர்ச்சா என நாடு முழுவதும் 200 க்கும் அதிகமான விவசாய அமைப்புகள் இந்த விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. டெல்லி அருகே உள்ள பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பே டெல்லிக்கு சென்றனர்.
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 2000 டிராக்டர்கள், உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து 500 டிராக்டர்கள், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 200 டிராக்டர்கள் என சுமார் 3000 டிராக்டர்களுடன் டெல்லி எல்லைகளை விவசாயிகள் சுற்றிவளைத்து உள்ளனர். பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் மட்டுமின்றி தென் மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் இதில் பங்கேற்க டெல்லி சென்று உள்ளார்கள். மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் விவசாயிகள் நடத்தும் இந்த போராட்டம் அரசியல் முக்கியத்துவம் பெற்று இருக்கிறது.
மத்திய அரசு இந்த போராட்டத்தை நிறுத்த பல்வேறு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டும் பயன் கிடைக்கவில்லை. இதனால் டெல்லி நோக்கி டிராக்டர்களில் வரும் விவசாயிகளை தடுப்பதற்காக, டயர்களை பஞ்சர் செய்யும் வகையில் ஆணி வேகத் தடைகள் வைக்கப்பட்டன. தடுப்பு வேலிகள், பேரிகாடுகள், கான்கிரீட் தடுப்புகளும் வைக்கப்பட்டு உள்ளது. டெல்லி எல்லையை ஒட்டிய பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை கைது செய்து மைதானத்திலேயே அடைக்கும் வகையில் போராட்டம் நடைபெறும் பவானா மைதானத்தை திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்ற டெல்லி அரசிடம் மத்திய அரசு அனுமதி கோரியது.
இதற்கு பதிலளித்து உள்ள டெல்லி உள்துறை அமைச்சர் கைலாஷ் கஹ்லாட், “விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. அமைதியாக போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை. மத்திய அரசு அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயிகளை கைது செய்வது நமது புண்ணில் உப்பை தேய்ப்பதை போன்றது. மத்திய அரசின் இந்த முடிவை நாங்கள் ஏற்க மாட்டோம். எனவே மைதானத்தை சிறையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மாடோம்.” என்று தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications