உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி.. டெல்லியில் இடிக்கப்பட்ட கட்டிடங்கள்.. உடனே தலையிட்ட தலைமை நீதிபதி
டெல்லி: டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டிடங்களை கட்டி இருப்பவர்களின் வீடுகள் மற்றும் கடைகள் இடிக்கப்பட்டு வருகின்றன. உச்ச நீதிமன்றம் இதற்கு இடைக்கால தடை விதித்தும் அங்கு கட்டுமானங்கள் இடிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் இதில் உச்ச நீதிமன்ற உத்தரவு உடனடியாக டெல்லி மாநகராட்சியிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி ரமணா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அங்கு கட்டிடங்கள் இடிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லியில் ஜஹாங்கிர்புரி பகுதியில் அனுமன் ஜெயந்தியின் போது இந்துக்கள் - இஸ்லாமியர்கள் இடையே மோசமான கலவரம் ஏற்பட்டது. வன்முறையை தொடர்ந்து அங்கு ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டு இருக்கும் கலவரக்காரர்களின் வீடுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கலவரம் செய்து, ஆக்கிரமிப்பு நிலத்தில் வீடும் கட்டி இருப்பவர்களின் கட்டிடங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி மூலம் இன்றும் நாளையும் அங்கு கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளன.

வழக்கு
இந்த நிலையில் இந்த கட்டிட இடிப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தேவ் மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த மனு இன்று அவசரமாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா முன் விசாரணைக்கு வந்தது. அதில் வழக்கறிஞர் தேவ், இந்த கட்டுமானங்களை முறையின்றி இடிக்கிறார்கள். இது தவறு.

தீர்ப்பு
சட்டத்தை மீறி நோட்டீஸ் கூட கொடுக்காமல் அங்கு கட்டுமானத்தை இடிக்கிறார்கள். இது உரிமை மீறல் என்று குறிப்பிட்டார். இதையடுத்து அங்கு வீடுகளை இடிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டு இருக்கும் வீடுகளை அகற்ற உச்சநீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிற்கவில்லை
இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பின்பாகவும் அங்கு வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி வீடுகளை இடிப்போம் என்று வடக்கு டெல்லி மேயர் ராஜா சிங் தெரிவித்தார். ஆனால் அங்கு வீடுகளை இடிக்கும் பணிகள் நிற்கவில்லை. தொடர்ந்து புல்டோசர் மூலம் அங்கு கட்டுமானங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

விளக்கம்
இதற்கு விளக்கம் அளித்துள்ள வடக்கு டெல்லி மேயர் ராஜா சிங், நாங்கள் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவோம். ஆனால் அதற்கான ஆர்டர் எங்களுக்கு வரவில்லை. செய்திகளில் வருவதை வைத்து பணிகளை நிறுத்த முடியாது. உச்ச நீதிமன்ற உத்தரவு எங்கள் கைகளுக்கு வந்ததும் அதில் நடவடிக்கை எடுப்போம். இருக்கும் பணிகளை நிறுத்துவோம், என்று குறிப்பிட்டுள்ளார்.
தலைமை நீதிபதி
இதையடுத்து கோர்ட் உத்தரவு வரவில்லை என்று கூறி மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து கட்டிடங்களை இடிக்கிறார்கள் என்று தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் தேவ் மீண்டும் முறையிட்டார். இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவு உடனடியாக டெல்லி மாநகராட்சியிடம் கொடுக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற தடை உடனே அமலுக்கு வர வேண்டும் என்று தலைமை நீதிபதி ரமணா கோர்ட் ரிஜிஸ்டரிடம் உத்தரவிட்டார். இது துரிதமாக செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். இதையடுத்து டெல்லியில் தற்போது கட்டிடங்கள் இடிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications