நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரி 15 மாணவர்கள் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லி: நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 15 மாணவர்கள் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Recommended Video
நடப்பாண்டில் மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டுகள் தற்போது டவுன்லோடு செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் 15 மாணவர்கள் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அம்மனுவில், ஜூன் மாதம்தான் பிளஸ் டூ தேர்வுகள் முடிவடைந்தன. இதனையடுத்து நீட், கியூட், ஜேஇஇ தேர்வுகள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக நடத்தப்படுவது மாணவர்களுக்கு கடும் அழுத்தத்தைத் தருகிறது. ஏற்கனவே நீட் உள்ளிட்ட தேர்வுகளின் அழுத்தங்களால் 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். பல மாநிலங்களில் கடுமையான வெள்ள பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு சிலபஸ் அடிப்படையிலானது. இந்த தேர்வுகள் அடுத்தடுத்து நடத்தப்படுவதால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் இருக்கிறது. ஆகையால் நீட் நுழைவுத் தேர்வை 3 அல்லது 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இம்மனுக்கள் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது திட்டமிட்டபடி, ஜூலை 17-ந் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று உத்தரவிட்டு அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் வழக்கு தொடர்ந்தது மாணவர்கள் என்பதால் அபராதம் விதிக்காமல் தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீட் தேர்வுக்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழக சட்டசபையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரும் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி 8-ந் தேதி 2-வது தீர்மானம் நிறைவேற்றபட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி விட்டதாக ஆளுநர் மாளிகை கூறியது. ஆனால் தகவல் உரிமை சட்டத்தின் கீழான கேள்விகளுக்கு ஆளுநர் மாளிகை குழப்பமான பதில் அளித்துள்ளது. இதனால் நீட் மசோதா தொடர்பாக தமிழகத்தில் குழப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications