அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஷாக்! அவதூறு வழக்கில்.. டெல்லி உயர்நீதிமன்றம் கொடுத்த முக்கிய உத்தரவு
டெல்லி: மதுபானக் கொள்கை வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதிட்ட வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ணா காந்தா சர்மா முன்னிலையில் நடந்த விசாரணையின் வீடியோ பதிவுகளை நீக்குமாறு கூகுள், ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி கெஜ்ரிவால் தனது தரப்பு வாதங்களை நேரில் முன்வைத்தபோது, அந்தப் படக்காட்சிகள் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டன.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் வீடியோ கான்பரன்சிங் விதிகளின்படி, நீதிமன்ற அனுமதியின்றி விசாரணையைப் பதிவு செய்வதும், வெளியிடுவதும் குற்றமாகும். எனவே, இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் போன்ற ஆம் ஆத்மி தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங், ஊடகவியலாளர் ரவீஷ் குமார் உள்ளிட்டோர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வழக்கறிஞர் வைபவ் சிங் என்பவர் தாக்கல் செய்திருந்தார்.
அதில், இந்த வீடியோக்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் நோக்கத்திற்காகத் திருத்தப்பட்டுப் பகிரப்பட்டதாகவும், இது நீதிமன்றத்தின் கண்ணியத்தைக் குறைப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு இன்று, நீதிபதிகள் வி.காமேஸ்வர ராவ் மற்றும் மன்மீத் பிரேம் சிங் அரோரா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "இது தனிப்பட்ட நபர் சார்ந்த விஷயம் மட்டுமல்ல, இது நீதித்துறை என்ற அமைப்பையே பாதிக்கும் விஷயம்" என்று நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். இந்த வீடியோக்களை நீக்கவும், அதற்கு முன்னர் இதை முதலில் பதிவேற்றியது யார் என்பதைக் கண்டறிய சமூக வலைதள நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதா மதுபானக் கொள்கை வழக்கிலிருந்து டெல்லி விசாரணை நீதிமன்றம், இந்த ஆண்டு தொடக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோரை விடுவித்திருந்தது. இப்படி இருக்கையில், தற்போது இந்த வழக்கில் மீண்டும் கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications