நாளை க்ளைமேக்ஸ்.. இரட்டை இலை சின்னம் சசிகலாவுக்கா, ஓபிஎஸ் தரப்புக்கா? டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு
டெல்லி: இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, சசிகலா அணி, பன்னீர் செல்வம் அணி என இரண்டாக பிரிந்தது அதிமுக. இந்த நிலையில், சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறை சென்றார்.
இதன்பிறகு, சசிகலா அணியிலிருந்து விலகினார் எடப்பாடி பழனிச்சாமி. எனவே ஓபிஎஸ், எடப்பாடி அணி, சசிகலா அதாவது தினகரன் அணி என 3 அணிகளும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரின. இதையடுத்து, தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.
இதன்பிறகு பன்னீர் செல்வம், எடப்பாடி அணிகள் ஒன்றாகின. இதனால் தினகரன் அணிக்கு எதிராக இந்த ஒருங்கிணைந்த அணி இரட்டை இலையை கேட்டு சட்டப் போராட்டத்தை தொடர்ந்தது.
கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையிலான முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டைஇலை சின்னம் உரிமை என்று, தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேற்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
டெல்லி உயர்நீதிமன்றம், இரு தரப்பு வாதங்களையும் கேட்டு கடந்த 8ம் தேதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக அறிவித்தது. இந்நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு மற்றும் அதிமுக பெயர் யாருக்கு என்பது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது.