தலைநகரை அலங்கரிக்கும் மூவர்ண கொடிகள்.. அம்பேத்கர் பற்றிய நிகழ்ச்சிகள்.. டெல்லி அரசின் செம அறிவிப்பு
டெல்லி: நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் தலைநகர் முழுவதும் மூவர்ணக் கொடிகள் ஏற்றப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
2021-22ஆம் நிதியாண்டிற்கான டெல்லி மாநில பட்ஜெட்டை துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று தாக்கல் செய்தார். அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் ஏழாவது பட்ஜெட் இதுவாகும். இன்று காலை 11 மணிக்கு தனது பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கிய மணீஷ் சிசோடியா பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
நாடு சுதந்திரம் அடைந்த 75 ஆண்டிற்குள் நுழைவதைக் கொண்டாடும் வகையில், வரும் மார்ச் 12ஆம் தேதி முதல் 75 வாரங்கள் தேசபக்தி வாரங்களாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். இந்த வாரங்களில் அண்ணல் அம்பேத்கர், பகத் சிங் ஆகியோர் பற்றிய நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
தலைநகர் முழுவதும் மூவர்ணக் கொடிகள் ஏற்றப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. இந்த பட்ஜெட் இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் மட்டும் இல்லாமல், 100ஆவது ஆண்டு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கவனம் செலுத்தும் வகையிலும் இருக்கும் என அவர் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.
அதாவது 2047ஆம் ஆண்டு டெல்லிவாசியகளின் தனிநபர் வருமானம் சிங்கப்பூரில் மக்களின் தனிநபரின் வருமானத்திற்குச் சமமாக இருக்க வேண்டும் என்றும் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
69,000 கோடி மதப்பிலான இந்த பட்ஜெட்டில் கெஜ்ரிவாலின் நீண்டகால கனவுத் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது. இந்த முறை கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு பட்ஜெட்டில் அதிகளவு நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.