டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு: மேலும் 30 இடங்களில் இன்று அமலாக்கத்துறை சோதனை
டெல்லி: டெல்லியில் ஆளும் ஆத்மி அரசின் மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் மேலும் 30 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கையால் தனியார் ஆதாயம் பெற்றனர்; இதில் பெருமளவு ஊழல் முறைகேடு நடந்துள்ளது என்பது சிபிஐ, அமலாக்கப் பிரிவு வழக்குகள். இது தொடர்பாக ஏற்கனவே ஆம் ஆத்மி மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா (மணீஷ் சிசோடியா) சிபிஐ, அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார்.

ரெய்டில் மணிஷ் சிசோடியா
அத்துடன் மணிஷ் சிசோடியாவுக்கு சொந்தமான பல இடங்களில் சோதனைகளும் நடத்தப்பட்டன. இந்த சோதனைகள், விசாரணைகள் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையாகவும் வெடித்தன. டெல்லி ஆம் ஆத்மி அரசை கவிழ்க்கும் சதியுடனேயே இந்த சோதனைகள் நடத்தப்பட்டன; மணிஷ் சிசோடியாவுக்கு நெருக்கடி கொடுத்து பாஜகவுக்கு தாவ வைக்கும் பேரம்தான் இந்த ரெய்டு எனவும் கூறப்பட்டது. இதனை பாஜக கடுமையாக நிராகரித்திருந்தது.

சிபிஐ அதிகாரி தற்கொலை
இந்நிலையில் மணிஷ் சிசோடியா மீதான வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகளில் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கருத்து தெரிவித்த மணிஷ் சிசோடியா, தம் மீதான பொய் வழக்கை நடத்த அழுத்தம் கொடுக்கப்பட்டதாலேயே அந்த அதிகாரி தற்கொலை செய்து கொண்டதாக குற்றம்சாட்டி இருந்தார்.

மீண்டும் ரெய்டு
இந்த பரபரப்புகளுக்கு நடுவே இன்றும் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரம் தொடர்பாகஅமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி, குருகிராம், உ.பி. லக்னோ, தெலுங்கானா ஹைதராபாத், கர்நாடகா பெங்களூர் நகரங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மொத்தம் 30 இடங்களில் சிபிஐ, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மணிஷ் சிசோடியா தவிர..
ஆனால் டெல்லியில் மணிஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் இம்முறை சோதனை நடைபெறவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே மணிஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தபட்டது. வங்கி லாக்கரிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த சோதனைகளில் எதுவும் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications