வசமாய் சிக்கிய அரவிந்த் கெஜ்ரிவால்? டெல்லி மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை சம்மன்.. பரபர தகவல்
டெல்லி: புதிய மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கோரி அமலாக்கத்துறை சார்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இந்நிலையில் தான் டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு புதிய மதுபான கொள்கை வகுக்கப்பட்டது. இதில் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிபிஐ அதிரடியாக சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டது. அப்போது பல கோடி ரூபாய் கணக்கில் வராமல் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்திருப்பது தெரியவந்தது.
இதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை விசாரணைக்குள் நுழைந்தது. அமலாக்கத்துறை சார்பில் டெல்லி துணை முதல்வராகவும், கலால் துறை அமைச்சராகவும் இருந்த மணிஷ் சிசோடியா வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு அவரை கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு அழைத்த அமலாக்கத்துறை அவரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தது.
அதேபோல் ஆம்ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி சஞ்சர் சிங் கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர்கள் 2 பேரும் புழல் சிறையில் உள்ளனர். மணிஷ் சிசோடியா கடந்த 8 மாதங்களாக சிறையில் உள்ளார். அவர் பலமுறை ஜாமீன் கேட்டாலும் கூட அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இன்று கூட உச்சநீதிமன்றத்தில் அவர் ஜாமீன் கோரிய மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் தான் தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நவம்பர் மாதம் 2ம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரும் கைது செய்யப்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால் ஆம்ஆத்மி கட்சியினர் கடும் கோபமடைந்துள்ளனர். ஆம்ஆத்மி கட்சியின் செயல்பாட்டை பார்த்து பாஜக பயப்படுகிறது. இதனால் தான் டெல்லி மதுபான ஊழல் தொடர்பான வழக்கில் ஒவ்வொரு தலைவர்கள் மீதும் பொய்யான குற்றச்சாட்டை சுமர்த்தி மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் கைது செய்து வருவதாக ஆம்ஆத்மி விமர்சனம் செய்து வருகிறது.
இருப்பினும் இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராவது என்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு தொடர்பாக சிபிஐ அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பி இருந்தது. இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜரானார். சுமார் 8 மணிநேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications