பிரதமர் 3.0 பதவியேற்பு விழா! குடியரசு தலைவர் மாளிகையில் உலவியது சிறுத்தையா? டெல்லி போலீஸ் விளக்கம்
டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியும் அவரது அமைச்சரவையும் மூன்றாவது முறையாக பதவியேற்ற போது குடியரசுத் தலைவர் மாளிகையில் மர்ம விலங்கு நடந்து செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவிய நிலையில் அது சிறுத்தை அல்ல, பூனை என டெல்லி போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் 543 தொகுதிகளுக்கும் நடந்துள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையை பெறவில்லை. இதனால் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா நேற்று முன் தினம் குடியரசுத் தலைவர்கள் மாளிகையில் மிக விமரிசையாக நடந்துள்ளது. இதில் அண்டை நாடுகளின் தலைவர்கள், மாநில ஆளுர்கள், முதல்வர்கள், தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள், பாஜக பிரமுகர்கள் உள்ளிட்ட 8 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
மத்திய அமைச்சராக பாஜக எம்பி துர்கா தாஸ் உய்கே பதவியேற்று உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்ட பிறகு வணக்கம் செலுத்துவதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நோக்கி சென்றார். அப்போது பின்னணியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறுத்தை போன்று ஒரு பெரிய விலங்கு நடந்து செல்வது போல் வீடியோவில் தெரிந்தது.
இது சமூகவலைதளங்களில் பரவியது. அந்த விலங்கு சிறுத்தையாக இருக்கும் என சொல்லப்பட்டதை அடுத்து பெரும் அச்சம் நிலவியது. குடியரசுத் தலைவர் மாளிகையில் வெளிநாட்டு பிரதிநிதிகள், பிரதமர் மோடி, அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் இந்த விலங்கு எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்தது.
வால் மற்றும் நடையை வைத்து பார்த்தால் அது சிறுத்தை என்றும் சிலர் அதை பூனை என்றும் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து டெல்லி போலீஸ் விளக்கம் அளிக்கையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைச்சரவை பதவியேற்பின் போது சிறுத்தை போன்ற விலங்கு ஒன்று நடமாடும் வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் தெரிந்த மிருகம் பூனைதான் என டெல்லி போலீஸ் விளக்கமளித்துள்ளது.












Click it and Unblock the Notifications