மத்திய அரசு vs ட்விட்டர் முற்றும் மோதல்.. பாய்ந்தது போக்சோ சட்டம்..! அடுத்து என்ன? பரபர பின்னணி
டெல்லி: மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுனவத்திற்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள் ஆபாச வீடியோ தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் மீது டெல்லி போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய ஐடி சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய சட்டங்களை நாட்டிலுள்ள சமூக வலைத்தளங்களும் ஓடிடி தளங்களும் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது.
பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தச் சட்டத்திற்கு உட்படுவதாக அறிவித்துவிட்டன. இருப்பினும், ட்விட்டர் நிறுவனம் இந்தச் சட்டத்திற்கு உட்படுவதாக தற்போது வரை அறிவிக்கவில்லை.

மத்திய அரசு vs ட்விட்டர்
இதனால் மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் கடந்த சில வாரங்களாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் பக்கம் தற்காலிகமாக முடக்கப்பட்டது. அதன் பிறகு ஜம்மு & காஷ்மீர், லடாக் பகுதிகளைத் தனி நாடாகக் காட்டும் வரைபடமும் ட்விட்டரில் இடம் பெற்றுப் பரபரப்பை ஏற்படுத்தியது.

போக்சோ வழக்குப்பதிவு
மத்திய அரசு இதனால் ட்விட்டர் நிறுவனத்தின் மீது கடும் கோபத்தில் உள்ளது. இந்தச் சூழலில் ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக டெல்லி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழந்தைகள் ஆபாச வீடியோ தொடர்பாகத் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

என்ன புகார்
கடந்த ஆண்டு ட்விட்டர், போஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாகத் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ட்விட்டர் இந்தியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டது. அப்போது ட்விட்டர் இந்தியா நிறுவனம் பொய்யான தகவல்களைச் சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் தான் தற்போது ட்விட்டருக்கு எதிராக போக்சோ மற்றும் புதிய ஐடி சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய ஐடி விதிகள்
புதிய ஐடி சட்டங்களுக்கு ட்விட்டர் உட்பட மறுத்துள்ளதால், அந்நிறுவனத்திற்கு வழங்கிய சட்ட பாதுகாப்பை மத்திய அரசு விலக்கிக் கொண்டது. இதனால் இனி ட்விட்டர் பயனாளர்கள் யார் எந்த கருத்தைப் பதிவிட்டாலும் அதற்கு ட்விட்டர் இந்தியா நிறுவனமே பொறுப்பு என்ற நிலை உருவாகியுள்ளது. அடுத்தகட்டமாக ட்விட்டர் மீது கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications