கொரோனா.. மக்களுக்கு ஓடி ஓடி உதவிய காங். ஸ்ரீநிவாஸ்.. பிடித்து விசாரித்த டெல்லி போலீஸ்.. என்ன நடந்தது?
டெல்லி: டெல்லியில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர மருத்துவ உதவிகளை செய்து வரும் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் ஸ்ரீநிவாஸ் பிவி போலீசாரால் விசாரணை செய்யப்பட்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மக்களுக்கு உதவி பொருட்களை வழங்கியது எப்படி, மருந்துகள் கிடைப்பது எப்படி என்று போலீசார் இவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
காங்கிரஸ் இளைஞரணியின் தலைவர் ஸ்ரீநிவாஸ் பிவி தலைமையில் டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை செய்து வருகிறார்கள். ரெமிடிஸ்வர் மருந்து தொடங்கி ஆக்சிஜன் சிலிண்டர் வரை பல அவசர உதவிகளை ஸ்ரீநிவாஸ் பிவி தலைமையிலான குழு வழங்கி வருகிறது.
இதற்காக "எஸ்ஓஎஸ் - ஐஒய்சி" என்ற குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் தூதரகத்திற்கு கூட ஸ்ரீநிவாஸ் பிவி குழுதான் ஆக்சிஜன் வழங்கியது.
விசாரணை
இந்த நிலையில் காங்கிரசின் ஸ்ரீநிவாஸ் பிவி மக்களுக்கு எப்படி உதவி செய்கிறார் என்று மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீஸ் விசாரணை நடத்தியது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் உங்களுக்கு கிடைப்பது எப்படி? மருந்துகள் எங்கிருந்து கிடைக்கிறது என்று போலீசார் இவரின் வீட்டிற்கு சென்று விசாரணை செய்துள்ளனர். இது டெல்லி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோபம்
இது தொடர்பாக பேசிய ஸ்ரீநிவாஸ் பிவி, நான் எந்த தவறும் செய்யும். முறைகேடாக யாருக்கும் உதவி செய்யவில்லை. மருந்துகளை பதுக்கவில்லை. மக்களுக்கு உதவி செய்கிறேன். நான் உதவி செய்வதை நிறுத்தமாட்டேன். என்னுடைய உதவிகளை எப்போதும் போல தொடர்ந்து செய்வேன் ஸ்ரீநிவாஸ் பிவி குறிப்பிட்டுள்ளார்.
இன்னொருவர்
இதேபோல் மக்களுக்கு உதவி செய்த ஆம் ஆத்மி எம்எல்ஏ திலீப் பாண்டேவும் விசாரணை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் இப்போதெல்லாம் மக்களுக்கு உதவி செய்வது கூட குற்றமாகிறது. இதற்கும் கூட போலீசிடம் விளக்கம் அளிக்க வேண்டியதாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
ஏன்
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள டெல்லி போலீஸ், டெல்லி ஹைகோர்ட்டின் உத்தரவின் பெயரிலேயே விசாரணை நடந்ததாகவும், கட்சி சார்பின்றி மக்களுக்கு உதவும் பல கட்சிகளிடம் விசாரணை செய்ததாக போலீஸ் கூறியுள்ளது. தீபக் சிங் என்பவர் இது தொடர்பாக டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்து இருந்தார்.
முறைகேடு
மக்களுக்கு சிலர் மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்களை முறைகேடாக வழங்குவதாகவும், இதனால் பொது மக்களுக்கு மருந்து தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் புகார் அளித்து, இதை பற்றி விசாரிக்க வேண்டும் என்று தீபக் சிங் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கில்தான் டெல்லி போலீஸ் விசாரிக்க வேண்டும் என்று டெல்லி ஹைகோர்ட் உத்தரவிட்டது.
கம்பீர்
இதை தொடர்ந்தே மக்களுக்கு மருந்து பொருட்களை வழங்கும் அரசியல் தலைவர்களை விசாரித்ததாக டெல்லி போலீஸ் கூறியுள்ளது. டெல்லி பாஜக எம்பி கவுதம் கம்பீரும், தான் போலீசார் மூலம் விசாரிக்கப்பட்டதாக கூறியுள்ளார். இதை அரசியலாக்க வேண்டாம். இது இயல்பான விசாரணைதான் என்று கம்பீர் கூறியுள்ளார்.