'சாத்தானின் தாய்..' டெல்லி கார் குண்டுவெடிப்புக்கு உண்மை காரணம் இதுதான்? விசாரணையில் பகீர் தகவல்
டெல்லி: தலைநகர் டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இந்தச் சம்பவத்தில் என்ன வகையான வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் என்ஐஏ அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இதற்கிடையே இதற்குப் பின்னணியில் 'சாத்தானின் தாய்' இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த வாரம் தலைநகர் டெல்லியில் மிக மோசமான ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. செங்கோட்டை அருகே நடந்த இந்தச் சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், சுமார் 20 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக இப்போது என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். அதில் பல பகீர் தகவல்கள் தெரிய வருகிறது.

சாத்தானின் தாய்
அதாவது டெல்லி குண்டுவெடிப்பில் 'சாத்தானின் தாய்' என்று அழைக்கப்படும் மிக மோசமான வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என என்ஏஐ அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது டெல்லியில் நடந்த தாக்குதலுக்கு டிரிஅசெட்டோன் டிரிபெராக்சைடு (TATP) என்ற வெடிமருந்து பயன்படுத்தப்பட்டு இருந்ததா என்பதை உறுதி செய்யத் தடயவியல் நிபுணர்கள் முயல்கிறார்கள்.
TATP மருந்து வெப்பம் அதிகரித்தாலே வெடிக்கக்கூடியது. தனியாக டெட்டனேட்டர் (detonator) எதுவும் தேவையில்லை. நவம்பர் 10ம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் முதலில் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகித்தனர்.
எப்படி வெடித்தது
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டதாகக் கூறப்படும் உமர் முகமது என்ற மருத்துவர் தான், குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது காரை ஓட்டிச் சென்றுள்ளார். டெல்லியின் சாந்தினி சௌக் பகுதிக்கு அருகில்தான் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. வெடிபொருளின் நிலையற்ற தன்மை குறித்து உமருக்கு முன்னரே தெரிந்திருந்திருக்கலாம் என அதிகாரிகள் கருதுகிறார்கள்.
'சாத்தானின் தாய்' என்று அழைக்கப்படும் TATP மிகவும் சென்சிடிவ் ஆனது. உராய்வு, அழுத்தம் அல்லது வெப்பநிலை அதிகரிப்பு போன்ற எந்தவொரு சிறிய மாற்றமும் இதை நிலையற்றதாக்கிவிடும். அம்மோனியம் நைட்ரேட் நிலையானது என்பதால் அதை வெடிக்க வைக்க டெட்டனேட்டர் தேவைப்படும். ஆனால், TATPக்கு டெட்டனேட்டர் எதுவும் தேவையில்லை..
சர்வதேச பயங்கரவாதம்
பொதுவாக இந்த வகை வெடிகுண்டுகளைச் சட்ட விரோதக் குழுக்களே உலகெங்கும் பயன்படுத்தும். இதன் காரணமாகவே இதை 'சாத்தானின் தாய்' என அழைக்கப்பட்டது. 2017 பார்சிலோனா தாக்குதல்கள், 2015 பாரிஸ் தாக்குதல்கள், 2017 மான்செஸ்டர் குண்டுவெடிப்பு மற்றும் 2016 பிரஸ்ஸல்ஸ் குண்டுவெடிப்புகளிலும் இந்த வகை வெடிகுண்டுகளே பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
TATP எப்போதும் மிகத் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும். டெல்லியில் வெடிகுண்டு வெடித்துச் சிதறிய இடத்திலும் மோசமான சேதங்கள் ஏற்பட்டு இருந்தது. TATP ஆதாரங்களை உறுதிப்படுத்த வெடிபொருள் எச்சங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். வெப்பம் அல்லது காருக்குள் ஏற்பட்ட உராய்வு காரணமாக அது வெடித்துச் சிதறியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
தீவிர விசாரணை
மிகப் பெரிய பயங்கரவாத நடவடிக்கைக்காகக் கொண்டு செல்லப்படும்போது, இது தற்செயலாக வெடித்ததாகக் கூறப்படுகிறது. TATP தயாரிக்கப் பல பொருட்கள் தேவைப்படுவதால், உமர் இந்த கெமிக்கல்களை எங்கிருந்து பெற்றார் என்பதையும் அதிகாரிகள் விசாரிக்கின்றனர். அவருக்குப் பெரிய தீவிரவாத நெட்வொர்க் ஆதரவு இருந்ததா அல்லது வேறு யாராவது வெடிபொருளைத் தயாரித்துக் கொடுத்தனரா என்றும் விசாரணை நடக்கிறது.
நவம்பர் 10ம் தேதி குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன்பு உமர் அந்த வாகனத்தை எடுத்துக் கொண்ட நீண்ட நேரம் ஓட்டியுள்ளார். TATP இருப்பது உறுதி செய்யப்பட்டால்.. அந்தக் குண்டு எப்படி நீண்ட நேரம் நிலையாக இருந்தது என்பது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications