எரிந்து போன வீடுகள்.. சிதைந்து போன கார்கள்.. உடைக்கப்பட்ட கடைகள்..உதவாத போலீஸ்.. கண்ணீரில் மக்கள்
டெல்லி: டெல்லி வன்முறையின் போது எங்களை கலவரக்காரர்கள் தாக்கினார்கள். அப்போது போலீசாரிடம் நாங்கள் காப்பாற்றுப்படி கேட்டோம். அவர்கள் தங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்று சொன்னார்கள் என்று பிரபல ஆங்கில ஊடகத்திடம் தங்கள் வேதனை மக்கள் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்
Recommended Video
எரிந்து போன கார்களின் எச்சங்கள், உடைந்த கண்ணாடிகள், உடைக்கப்பட்ட கடைகள் மற்றும் வீடுகளின் எரிந்த எச்சங்கள், அங்குள்ள மக்களின் அழுகைகள், வடகிழக்கு டெல்லியின் தெருக்களில் குப்பைகளை போல் வீசப்பட்டிருக்கும் கற்கள் ஆகியவை தான்.. திங்கள்கிழமை முதல் இந்தியாவின் தேசிய தலைநகரான டெல்லியில் நடந்த வன்முறையை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.
வியாழக்கிழமை (இன்றைய) நிலவரப்படி குறைந்தது 34 பேர் கலவரத்தில் இறந்துள்ளனர், மேலும் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மௌஜ்பூர், ஜாப்ராபாத், சந்த் பாக், யமுனா விஹார் உள்ளிட்ட சில பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டு பார்போரின் மனதை உருக்குவதாக உள்ளது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்த பகுதிகளில், இன்று மத்திய துணை ராணுவப் படைகளின் 45 கம்பெனி படைகளும் நிறுத்தப்பபட்டுள்ளது. ஏராளமான போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

12 கிலோமீட்டர் தான்
ஆனால் திங்களன்று கலவரங்கள் நடந்து இந்த பகுதிகள் எரியும் போது, இப்போது குவிக்கப்பட்டு போலீஸ் படைகள் அங்கு இல்லை. இந்த பகுதிகளில் திங்கள் கிழமை அன்று மக்கள் மீது கற்கள் வீசப்பட்டபோது அடித்து நொறுக்கப்பட்ட போது , கொல்லப்பட்ட போது, கடைகள் பெட்ரோல் குண்டுகளால் எரிக்கப்பட்ட போது ; வாகனங்கள் எரிக்கப்பட்ட போது, போலீஸ் இல்லை. இத்தனைக்கும் டெல்லி காவல்துறையின் தலைமையகத்திலிருந்து 12 கி.மீ தூரத்திற்குள் உள்ள பகுதிகள் இவை. ஆனாலும் கோரம் நடந்துவிட்டது.

பிரபல ஊடகம் தகவல்
பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று இந்த பகுதிகளுக்குச் சென்று உள்ளூர்வாசிகளுடன் உரையாடியிருக்கிறது. அப்போது அவர்கள் பொதுவாகச் சொன்ன ஒரு விஷயம் என்றால். டெல்லி காவல்துறை எதுவுமே செய்யவில்லை என்பது தான். பஜான்புராவில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் கலவரக் கும்பலால் தீவைத்து எரிக்கப்பட்டதுடன் அதில் கேசியரிடம் இருந்த அத்தனை பணமும் திருடப்பட்டிருக்கிறது. பெட்ரோல் பங்க் உரிமையாளரை அவரது நண்பர் போராடி காப்பாற்றி உள்ளார்.

தீவைத்து எரிப்பு
அந்த பிரபல ஆங்கில டிவியிடம் பேசிய அவர்கள், சுமார் 10-20 பேர் திடீரென வந்து பணத்தை கொள்ளையடிக்கத் தொடங்கினர் என்றார்கள். அப்போது பெட்ரோல் பங்கைத் தாக்கிய கும்லைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள் மற்றும் காவல்துறையினர் என்ன செய்தார்கள் என்று அந்த ஊடகம் கேட்டது. அப்போது அவர்கள், "கும்பலில் சுமார் 2,000 பேர் இருந்தனர், ஆனால் காவல்துறையினர் பெரிய அளவில் அங்கு இல்லை . நான்கு போலீசார் வாஷ் ரூமில் மறைந்திருந்தனர். மற்றவர்கள் அமைதியான வேடிக்கை பார்த்தபடி இருந்தனர் " என்று தெரிவித்தனர்.

உணவகம் அழிப்பு
உள்ளூர்வாசிகள் ஆங்கில டிவியிடம் பேசுகையில், கலவரக்காரர்களை நிறுத்துமாறு போலீசாரிடம் கேட்டபோது, போலீசார், அவர்கள் (கலகக்காரர்கள்) என்ன செய்ய விரும்புகிறார்களோ அதைச் செய்ய முடியும். நடவடிக்கை எடுக்க எந்த உத்தரவும் தங்களுக்கு வரவில்லை என்றார்கள் என்று குமுறினார்கள். யமுனா விஹாரில் எங்களின் உணவகம் போலீஸ் முன்பே கலவரக்கார்களால் அழிக்கப்பட்டது என்று ஒருவர் வேதனையுடன் விவரித்தார்.

சுடுமாறு மன்றாடினோம்
அப்போது அவர் கூறுகையில், "எனது கடை திங்களன்று தாக்கப்பட்டது. கலவரக்காரர்கள் வந்தவுடன், எப்படியும் காப்பாற்றப்படும் என்று நம்பி ஓட்டலின் ஷட்டரை கீழே இழுத்தோம். ஆனால் அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசத் தொடங்கினர். அப்போது கடை முன்பு 40-50 போலீசார் நின்று கொண்டிருந்தனர். கலகக்காரர்கள் 2,000 பேர். அங்கு இருந்தனர். நாங்கள் அவர்களிடம் (போலீசார்) சொன்னோம், நீங்கள், கலவரக்காரர்களைத் தடுக்க குறைந்தபட்சம் வானத்தை நோக்கியாவது சுடுங்கள் என்று மன்றாடினோம். ஆனால் எந்த உத்தரவும் வரவில்லை என்று சொன்னார்கள்" என்றார்.

கடன் வாங்கினேன்
அவரிடம் நீங்கள் மீண்டும் கடையை கட்டப்போகிறீர்களா என்று கேட்ட போது, எங்கள் குடும்பம் கடைக்காகவே எல்லாவற்றையும் இழந்துவிட்டது என கண்ணீர்விட்டு உடைந்து அழுதார். அத்துடன் அவர் கூறுகையில், நான் கடன் வாங்கினேன், என் தந்தையும் சகோதரரும் கடைக்காக கடன் வாங்கி இருந்தார்கள் அவர்கள் (கலகக்காரர்கள்) நினைத்ததை செய்துவிட்டார்கள். எங்களால் இனி எதுவும் செய்ய முடியாது. இனி என்ன நடக்கும்? அரசியல்வாதிகள் தங்கள் சொந்த நலன்களுக்காக வேலை செய்கிறார்கள், அதனால் பாதிக்கப்படுபவர்கள் நாங்கள் தான்" என்றார் கண்ணீருடன்.

கதறிய பழக்கடைக்காரர்
சந்த் பாக் நகரில், ஒருவர் எரிக்கப்பட்ட தனது வீடு மற்றும் பழக் கடையைப் பார்த்து கதறி அழுகிறார். அவரது குடும்பம் 1982 ஆம் ஆண்டு முதல் இங்கு வசித்து வந்தது, இன்று எஞ்சியிருப்பது அதன் எரிந்த எச்சங்கள் தான். இது தொடர்பாக அவர் கூறுகையில். " என் வீடு எரிக்கப்பட்ட அன்றைய தினமும் காவல்துறையினர் இங்கு வந்திருந்தார்கள். ஆனால் போதிய போலீசார் வரவில்லை, ஆனாலும் அவர்கள் கல் வீச்சால் பாதிக்கப்படாத அளவுக்கு உடைகள் அணிந்திருந்தனர் "என்று அவர் கூறினார்.

இன்னமும் சரியாகவில்லை
அப்படியே அவரது வீட்டிற்குள் ஊடகத்தினரை அழைத்துச்சென்றார். அங்கு வீசப்பட்ட நான்கு குண்டுகளால் எச்சங்களாக எரிந்த நிலையில் வீடு கிடந்ததை வேதனையுடன் காண்பித்தார் "என்னிடம் இருந்த அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன, வீடு முழுவதும் எரிந்துவிட்டது" என்றார். உங்கள் பழக் கடையை புதிதாகத் தொடங்கலாமா என்று கேட்டதற்கு, அரசியல்வாதிகள் மக்களின் இதயங்களை விஷம் வைத்துள்ளனர், அது இன்னமும் சரியாகவில்லை என்றார்.

ஸ்ரீவஸ்தவா நம்பிக்கை பேட்டி
இதற்கிடையில், பஜான்புராவில், தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து டெல்லி காவல்துறை சிறப்பு ஆணையர் (சட்டம் ஒழுங்கு) எஸ்.என்.ஸ்ரீவஸ்தவாவிடம் கேட்ட போது "இன்றைய நிலைமை முற்றிலும் அமைதியானது. நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதால் நாங்கள் முழுமையாக திருப்தி அடைகிறோம். நாங்கள் முயற்சிக்கிறோம் அவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்ற அவர்களிடம் நம்பிக்கையை வலுப்படுத்துங்கள். அவர்களுக்கு உதவ காவல்துறை இங்கே உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications