மூச்சு முட்டும் டெல்லி.. 49 சிகரெட் புகைப்பதற்கு சமமான காற்று மாசு.. தமிழ்நாட்டின் நிலைமை என்ன!
டெல்லி: நமது தேசிய தலைநகரான டெல்லியில் இப்போது காற்று மாசு மிக மோசமாக இருக்கிறது. உலகிலேயே மிக மோசமாகக் காற்று மாசு கொண்ட நகரங்களில் ஒன்றாக டெல்லி மாறியுள்ளது. டெல்லியில் தற்போதுள்ள காற்று மாசால் ஒரு நபருக்குத் தினசரி 49.02 சிகரெட்களை சுவாசிப்பதற்கு இணையான உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தேசிய தலைநகரான டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலங்களில் காற்று மாசு மிக மோசமாக இருக்கும். கட்டுமான பணிகள், கார்களுக்கு கட்டுப்பாடுகள் கூட விதிக்கப்படும்.

டெல்லி காற்று மாசு: இந்தாண்டு வழக்கத்தை விடக் காற்று மாசு மிக மோசமாக இருக்கிறது. கடந்த அக்டோபர் மாத இறுதியில் இருந்தே டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து குறைந்து நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இந்தாண்டு தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. அதேபோல அண்டை மாநிலங்களில் விவசாயிகள் விவசாய கழிவுகளை எரிப்பதும் ஆகியவை இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இந்த காற்று மாசு காரணமாக டெல்லி மக்கள் வீடுகளிலேயே முடங்கிப் போய் உள்ளனர். குறிப்பாக இன்றைய தினம் மதியம் 12:30 மணியளவில் டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 978ஆக இருந்தது. இது ஒரு நாளைக்கு 49.02 சிகரெட்களை புகைப்பதற்குச் சமமாகும். அதாவது 24 மணி நேரத்தில் ஒருவருக்கு 49 சிகரெட்கள் புகை பிடித்தால் எந்தளவுக்குப் பாதிப்பு ஏற்படுமோ, அதே அளவு பாதிப்பு டெல்லியில் இருப்பவர்களுக்குத் தினசரி ஏற்படுகிறது.
ஹரியானா: டெல்லியில் இந்தளவுக்குக் காற்றின் தரம் மோசமாக இருக்கும் நிலையில், அண்டை மாநிலமான ஹரியானாவிலும் காற்றின் தரம் மோசமாகவே இருக்கிறது. இப்போது டெல்லிக்கு அடுத்தபடியாக நாட்டிலேயே மிகவும் மாசடைந்த மாநிலமாக ஹரியானா இருக்கிறது. ஹரியானாவில் இப்போது காற்றின் தரம் 631ஆக இருக்கிறது. இது தினசரி 33.25 சிகரெட் பிடிப்பதற்குச் சமமாகும்.
இப்போது டெல்லி மற்றும் ஹரியானா மாநிலங்களில் புகை மூட்டம் சூழ்ந்து இருக்கிறது. பார்க்கப் பனி மூட்டம் போல இருந்தாலும் இது காற்று மாசால் ஏற்பட்ட புகையாகும். இந்த கடுமையான புகையால் சில மீட்டர் தூரத்தில் என்ன இருக்கிறது என்பதே தெளிவாகத் தெரியாத சூழலே நிலவுகிறது. இந்த இரு மாநிலங்கள் மட்டுமின்றி பெரும்பாலான வடமாநிலங்களில் நிலைமை மோசமாகவே இருக்கிறது.
அண்டை மாநிலங்கள்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் இப்போது காற்றின் தரம் 237ஆக இருக்கிறது. இது கிட்டதட்ட 10.16 சிகரெட்களை பிடிப்பதற்குச் சமமாகும். பஞ்சாப் மாநிலத்தில் காற்றின் தரம் 233ஆக இருக்கும் நிலையில், அது தினசரி 8.34 சிகரெட்கள் பிடிப்பதற்குச் சமமான அளவுக்கு மோசமாக இருக்கிறது. இது மட்டுமின்றி பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் காற்றின் தரம் மோசமாக இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு: இந்தியாவிலேயே ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் தான் காற்றின் தரம் மிகத் தூய்மையாக இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அதைத் தொடர்ந்து. வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் காற்றின் தரம் தூய்மையாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்று காற்றின் தரம் 104ஆக இருக்கிறது.
காற்றின் தரம் 0- 50 வரை இருந்தால் நன்று என்று அர்த்தம். 50- 100 வரை இருந்தால் சுமாராக இருக்கிறது என்று அர்த்தம். 100- 200 வரை இருந்தால் மோசம், 200- 300 வரை இருந்தால் மிக மோசம் என அர்த்தம். 300- 400 வரை இருந்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் 400ஐ தாண்டினால் அது அபாயகரமானது என்று அர்த்தமாகும்.












Click it and Unblock the Notifications