இனி ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தல் ஆணையம்? பெரிதாக திட்டம் போடும் மத்திய அரசு! அதிர்ச்சியில் பாக்.!
டெல்லி: இப்போது நாடு முழுக்க தொகுதி மறுவரையறை குறித்தே பேச்சாக இருக்கிறது. இன்றைய தினம் இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு இதை வைத்து ஒரு முக்கியமான திட்டத்தை மத்திய அரசு போட்டுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
"காஷ்மீர் நம்முடையது... அதுவும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) கண்டிப்பாக நம்முடையது!" - இது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் சொன்ன வாசகம். இப்போது அந்த முழக்கத்தைச் சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தும் வகையில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவில் (Delimitation Bill 2026) பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாகவும் சில முக்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலைமை சரியான உடன், அங்குத் தேர்தலை நடத்துவதற்கான சட்ட முன் வடிவமைப்பும் இதில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்போதும் கூட ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் மொத்தம் உள்ள இடங்களில் 24 இடங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளுக்காக ஒதுக்கப்பட்டே வருகின்றன. நமக்குச் சொந்தமான காஷ்மீர் பகுதியை இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமித்து இருப்பதால் இதுவரை அங்குத் தேர்தல் நடக்கவில்லை.. அந்த இடங்கள் காலியாகவே இருக்கின்றன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் திரும்பும்போது, இந்தியத் தேர்தல் ஆணையமே அங்குத் தொகுதி மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீதான உரிமை வெறும் பேச்சு அல்ல, அது சட்டப்பூர்வமான உரிமை.. என்பதை உலக நாடுகளுக்கு உரக்கச் சொல்லவே இந்த நடவடிக்கையாகும்.
சிக்கல்
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நிறைவேற்ற மெஜாரிட்டியே போதும் என்பதால், ஆளும் என்டிஏ தரப்பால் மிக எளிதாக இந்த மசோதாவை நிறைவேற்ற முடியும். ஆனால், இதோடு இணைந்த 131வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றச் சிறப்பு மெஜாரிட்டி, அதாவது 3ல் இரு பங்கு ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர்
காஷ்மீர் விவகாரத்தைப் பொறுத்தவரை 1947ல் மகாராஜா ஹரி சிங் கையெழுத்திட்ட அந்த ஒப்பந்தமே ஒட்டுமொத்த காஷ்மீரும் இந்தியாவிற்குச் சொந்தம் என்பதற்கு ஆதாரம். 1994ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒருமனதான தீர்மானமும் இதைத் தான் வலியுறுத்துகிறது. இப்போது மோடி அரசு, 370-வது சட்டப்பிரிவை நீக்கிய கையோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நோக்கி தனது பார்வையைத் திருப்பியுள்ளது.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கே ஆதரவாகவே ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் இருந்தாலும் கூட தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) நடத்தாமல் எப்படித் தொகுதி மறுசீரமைப்பு செய்ய முடியும்? தேர்தல் நேரத்தில் அரசியல் ஆதாயத்திற்காக இந்த மசோதா கொண்டு வரப்படுகிறதா? என அடுக்கடுக்கான கேள்விகள் முன்வைக்கப்படுகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சட்டரீதியாக ஒரு கட்டமைப்பை உருவாக்கி வைப்பது என்பது, எதிர்காலத்தில் ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் அதற்குத் தயாராக இருக்க உதவும்.












Click it and Unblock the Notifications