‛‛கருத்து வேறுபாடு’’.. இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்தது ஏன்? பரபர பின்னணி
டெல்லி: லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள இந்திய தேர்தல் கமிஷனில் ஆணையராக இருந்த அருண் கோயல் திடீரென்று நேற்று ராஜினாமா செய்தார். இந்நிலையில் தான் அவர் ராஜினாமா செய்ததன் பின்னணியில் உள்ள பரபரப்பான காரணம் வெளியாகி உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை ஒரு தலைமை ஆணையர், 2 தேர்தல் ஆணையர்கள் இருப்பார்கள். தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பு வகித்து வருகிறார். அதேபோல் தேர்தல் ஆணையராக அருண் கோயல் இருந்தார். இன்னொரு தேர்தல் ஆணையர் பொறுப்பு காலியாக உள்ளது.

இதனால் 3 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 2 பேர் மட்டுமே பணி செய்து வந்தனர். லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் அருண் கோயல் ஆகியோர் தீவிரமாக பணி செய்து வந்தனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அமைதியான முறையில் லோக்சபா தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இந்நிலையில் தான் திடீரென்று நேற்று இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையராக பொறுப்பு வகித்த அருண் கோயல் தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். அவர் தனது தேர்தல் ஆணையர் எனும் பொறுப்பை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் வழங்கினார். ஜனாதிபதி திரெளபதி முர்மு அவரது கடிதத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் இந்திய தேர்தல் ஆணையர் பொறுப்பில் இருந்து அருண் கோயல் விலகி உள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் அருண் கோயல் தனது பொறுப்பை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையத்தில் ஒரு தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருந்த நிலையில் அருண் கோயலும் விலகி உள்ளார். இதனால் 2 தேர்தல் ஆணையர் பதவி தற்போது காலியாக உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் மட்டும் பொறுப்பில் உள்ளார்.
இதனால் லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு திட்டமிட்டப்படி வரும் 15ம் தேதிக்குள் வெளியாகுமா? இல்லாவிட்டால் தேர்தல் தேதி அறிவிப்பு என்பது தள்ளிப்போகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே தான் அருண் கோயல் ராஜினாமா செய்ததன் பின்னணியில் உள்ள முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அருண் கோயல் தனது ராஜினாமா கடிதத்தில் சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தான் சொந்த காரணம் என்றால் என்ன? என்பது பற்றி விசாரிக்கப்பட்டது. உடல்நலக்குறைவு அல்லது குடும்ப பிரச்சனையின் காரணமாக அவர் தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்தாரா? என விசாரித்தபோது அப்படி எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் அருண் கோயல் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மாறாக அவர் அருண் கோயலுக்கும், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது தான் ராஜினாமாவுக்கு காரணம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை தேர்தல் ஆணையரக வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. அதாவது சில கோப்புகள் தொடர்பாக தேர்தல் ஆணையர் அருண் கோயலுக்கும், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனால் தான் தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications