'சாவர்க்கர்' பிறந்தநாளில்.. நாடாளுமன்றம் திறக்கிறார் பிரதமர் மோடி.. "பங்கேற்க மாட்டோம்": திமுக அதிரடி
டெல்லி: வரும் 28ம் தேதி டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இந்நிகழ்ச்சியை புறக்கணிக்கவும் முடிவெடுத்துள்ளன. இந்நிலையில் திமுகவும் இதை புறக்கணிப்பதாக கூறியுள்ளது.
இந்தியாவில் கடந்த 1927ம் ஆண்டு நாடாளுமன்றம் கட்டப்பட்டது. பின்னர் இது கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கமும் செய்யப்பட்டது. ஆனாலும், இதில் இடப்பற்றாக்குறை நீடித்து வருவதால் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2020ம் ஆண்டு புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து அதே ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி இதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார்.
இதனையடுத்து திட்டமிட்டவாறு புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ்கள் அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் குடியரசு தலைவரின் பெயர் இடம்பெறவில்லை. இந்த புதிய கட்டிடத்தையும் பிரதமர் நரேந்திர மோடிதான் திறந்து வைக்கிறார்.

இதனை எதிரக்கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. மட்டுமல்லாது இந்த கட்டிட திறப்பு விழாவில் தாங்களும் பங்கெடுக்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளன. திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தங்களது எதிர்ப்பையும், புறக்கணிப்பையும் தெரிவித்துள்ளன. இது குறித்து திரிணாமுர் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓபிரையன் கூறுகையில், "நாடாளுமன்றம் என்பது பேறும் புதிய கட்டடம் மட்டும் இல்லை. பாரம்பரியம், மாண்புகள், மரபுகள் மற்றும் முன்னுதாரணங்கள் நிறைந்த அமைப்பு அது. நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் அடித்தளமாகும்.
இது எதுவும் புரியாமல் நான், எனது, என்னுடைய என சுயபெருமைகள பாடும் நிகழ்வாக மட்டும் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை நடத்த பிரதமர் முயல்கிறார். எனவே இதனால் இந்த கட்டிட திறப்பு விழாவை திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணிக்கிறது" என்று கூறியுள்ளார். அதேபோல காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரித்த ராகுல் காந்தி,
"கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புறக்கணிக்கப்பட்டார். இது குடியரசுத் தலைவரின் அரசியலமைப்புச் சட்டப்படியான பங்களிப்பதை நிராகரிப்பதாகும். எனவே இப்போதாவது நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் நிகழ்வுக்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்பட வேண்டும்" என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த நிகழ்வில் திமுக பங்கேற்காது என்று தெரிவித்துள்ளது. இதனை அக்கட்சியின் எம்பி திருச்சி சிவா உறுதி செய்துள்ளார்.
அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என்று கூறியுள்ளன. இதனை ரவிக்குமார் எம்பி உறுதி செய்துள்ளார். இது குறித்து கூறுகையில், "இந்த நிகழ்வை புறக்கணிக் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று இதில் குடியரசுத்தலைவர் புறக்கணிக்கப்படுகிறார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் இவர்தான் தலைவர்.
நம்முடைய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 79ல், நாடாளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் குடியரசுத் தலைவரை உள்ளடக்கியதுதான் இந்த அமைப்பு என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில் இவரை புறக்கணித்து இந்நிகழ்வை நடத்துவது ஏற்புடையது அல்ல. அதேபோல, இக்கட்டிடத்தை திறந்து வைக்கும் தேதியும் சர்ச்சைக்குரியதுதான்.
சாவர்க்கர் பிறந்த நாளில் இந்த கட்டிடம் திறப்பு விழா நடைபெறுகிறது. இதன் மூலம் ஆளும் கட்சிக்கு நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பது தெரிந்துக்கொள்ள முடிகிறது. ஏனெனில், சாவர்க்கர் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவரல்ல" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications