நாடாளுமன்றத்தில் ஒலித்த திருப்பரங்குன்றம் விவகாரம்.. திமுக கூட்டணி எம்.பிக்கள் முழக்கம்! வெளிநடப்பு
டெல்லி: திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக சார்பில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் தொடர் முழக்கம் எழுப்பி வருகின்றனர். மாநிலங்களவையில் இருந்து திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப நாளன்று உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு வரும் நிலையில், வழக்கத்திற்கு மாறாக மலை உச்சியில் உள்ள விளக்கு தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி மதுரையை சேர்ந்த ராம ரவிக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் மலை உச்சியில் உள்ள விளக்குத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தார்.

அதற்கு எதிராக தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தன. இதேபோன்று மனுதாரர் ராம ரவிக்குமார் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய மனுவை நிறுத்தி வைக்க கோரி ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது, நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவால் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசுத் தரப்பு வாதிட்டது. அதிகார வரம்பை மீறி தனி நீதிபதி சுவாமிநாதன் செயல்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்றும், தனி நீதிபதி சுவாமிநாதன் மோதல் காட்சிகளை பார்த்தாரா என தெரியவில்லை எனவும் அரசு தரப்பில் முறையிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு அரசு மற்றும் மதுரை ஆட்சியரின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசு உள்நோக்கத்துடன் மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும், பாதுகாப்புக்காக சி.ஐ.எஸ்.எப்-ஐ அழைத்ததில் தவறு இல்லை என்றும் தெரிவித்தனர். தனி நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்ய மறுப்புத் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை அவரே விசாரிப்பார் எனத் தீர்ப்பளித்தனர்.
அதன்படி, திருப்பரங்குன்றம் வழக்கு மீண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மலை உச்சியில் உள்ள விளக்கு தூணில் தீபம் ஏற்றும்படி தான் உத்தரவிட்டும் அதை நிறைவேற்றாதது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பரபரப்பான சூழல் இருந்ததால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை எனவும், அசாதாரண சூழல் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் வாதிட்டனர்.
மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருவதால், உத்தரவை அமல்படுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரினர். இதைத் தொடர்ந்து, ஆட்சியரும், காவல் ஆணையரும் காணொளி காட்சி வாயிலாக ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். காவல் ஆணையர் காணொளி காட்சி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து, ஆட்சியர் பிறப்பித்த 144 தடை உத்தரவை ரத்து செய்த நீதிபதி, மனுதாரரும் அவருடன் 10 பேரும் சேர்ந்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள விளக்கு தூணில் உடனடியாக மாலை 6.30 மணிக்கு தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். தீபம் ஏற்றப்பட்டதும் அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதைச் சுட்டிக்காட்டி, நேற்று தீபம் ஏற்ற போலீசார் அனுமதி மறுத்தனர். நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்டோரை கைது செய்தனர்.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. திமுகவின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர். பாலு மற்றும் மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினர்.
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் தொடர் முழக்கம் எழுப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்நோக்கத்துடன் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். சபாநாயகர் இருக்கை அருகே சென்று திமுக மற்றும் கூட்டணி எம்.பிக்கள் கடுமையாக கோஷமிட்டு வருகின்றனர்.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு அவசரமாக விவாதிக்க வேண்டும் என திமுக சார்பில் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்தார் எம்.பி. திருச்சி சிவா. திருப்பரங்குன்றம் விவகாரத்தை விவாதிக்க துணை குடியரசுத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications