திரெளபதி.. ஜெயலலிதா புடவையை சட்டசபையில் துகிலுரித்த திமுக.. லோக்சபாவில் நிர்மலா சீதாராமன் ஆக்ரோஷம்
டெல்லி: சட்டசபையில் ஜெயலலிதாவின் புடவையை அன்று துகிலுரித்தவர்கள் திமுகவினர் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் புடவையை இழுத்தவர்கள் எல்லாம் திரௌபதியைப் பற்றி பேச தகுதியற்றவர்கள் என்று லோக்சபாவில் நிர்மலா சீதாராமன் ஆக்ரோஷமாக பேசியுள்ளார்.
மணிப்பூரில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கலவரம் நீடிக்கிறது. பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சிகள் கடந்த 2 நாட்களாக லோக்சபாவில் பேசினர்.

மணிப்பூரில் பாரதமாதாவையே பாஜக அரசு படுகொலை செய்துவிட்டது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்
இந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது திமுக எம்பி கனிமொழி பேசினார். மகாபாரத திரெளபதியை போல மணிப்பூரிலும் பெண்கள் துகிலுரியப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டும் யாரும் உதவவில்லை என்று திமுக எம்பி கனிமொழி ஆவேசமாக பேசினார். மணிப்பூரில் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு நிர்வாண ஊர்வலமாக நடத்தப்பட்டும் மத்திய அரசு மவுனம் காக்கிறது. அடைக்கலம் கோரிய பெண்களுக்கு மணிப்பூர் போலீஸ் பாதுகாப்பு தராமல் வன்முறை கும்பலிடம் விட்டுவிட்டு போனது. மணிப்பூர் விவகாரத்தில் பெண்கள் ஆணையங்கள் அனைத்தும் அமைதி காக்கின்றன.
மணிப்பூர் நிலவரம் குறித்து இன்னமும் மத்திய அரசு மவுனம் காக்கிறது. மணிப்பூர் மக்களை பிரதமர் சந்தித்து நீதியை நிலைநாட்ட வேண்டும். 3 மாதங்கள் கடந்த பிறகும் மணிப்பூரில் படுகொலைகளை தடுத்து நிறுத்த பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கனிமொழி அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

லோக்சபாவில் கனிமொழி பேசியது அதிர்வலைகளை உருவாக்கிய நிலையில் அனைத்திற்கும் இன்றைய தினம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பதிலடி கொடுத்தார். திரௌபதி பற்றி பேசியிருக்கிறார்கள்.. ஒரு பெண்ணாக இதை நான் சொல்வதற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. திரௌபதியின் புடவை துகிலுரியப்பட்டதைப் பற்றி பேசியிருக்கிறார் திமுக எம்.பி. தமிழ்நாட்டு சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவின் புடவையை இழுத்தவர்கள்தான் திமுகவினர் என்று ஆவேசமாக பேசினார் நிர்மலா சீதாராமன்.
1989 மார்ச் 25ஆம் தேதி ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்த கட்சி திமுக. அப்போது சட்டசபையில் அவரது புடவை கலைந்து, தலை கலைந்து நின்று கொண்டிருந்த போது அதைப்பார்த்து சிரித்தவர்கள்தான் திமுகவினர். அப்போது ஜெயலலிதா ஒரு சபதம் போட்டார். இனி நான் இந்த சட்டசபைக்கு வர மாட்டேன். அப்படி சட்டசபைக்குள் நுழைந்தால் முதலமைச்சராகத்தான் நுழைவேன் என்று சபதம் போட்ட ஜெயலலிதா தனது சபதத்தில் ஜெயித்தார் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். சட்டசபையில் அன்று ஜெயலலிதாவின் புடவையை இழுத்து துகிலுரித்தவர்கள் இன்றைக்கு திரௌபதியைப் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நிர்மலா சீதாராமன் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்தபோது திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications