அரசுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது... பிரதமர் மோடி நறுக்
டெல்லி: மத்திய அமைச்சர்கள் விடுமுறை எடுப்பதை தவிர்க்க வேண்டும், தங்களது பணிகளை விடாமுயற்சியுடன் சிறப்பாக செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. பாஜக மட்டும் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களை கைப்பற்றியது. இதனை அடுத்து, பிரதமராக நரேந்திர மோடி 2-வது முறையாக கடந்த 30-ந்தேதி பதவி ஏற்றார்.

அவரது அமைச்சரவையில் 57 அமைச்சர்கள் இடம் பெற்று உள்ளனர். 24 பேர் கேபினெட் அமைச்சர்களாகவும், தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாக 9 பேரும், ராஜாங்க அமைச்சர்களாக 24 பேரும் இடம் பெற்று உள்ளனர்.
புதிய மத்திய அமைச்சர்களுக்கு நேற்று முன்தினம் இலாகா ஒதுக்கப்பட்டது. அதைததொடர்ந்து மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், சிறு வியாபாரிகள் பயன்பெறும் வகையில் புதிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. சிறு வியாபாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் பென்சன் அறிமுகம் செய்யும் திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தநிலையில், மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி புதிய அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளார். அந்த வகையில், மத்திய அமைச்சர் விடுமுறை எடுப்பதை தவிர்க்க வேண்டும், தங்களது பணிகளை விடாமுயற்சியுடன் சிறப்பாக செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு வரவேற்பு விழாக்கள் நடத்தப்படும். இதில் ஆடம்பரம் வேண்டாம். பகட்டான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம். அரசுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. ஒரு சிறிய தவறு கூட நடைபெறாமல் இருக்க மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். ஒவ்வொருவரும் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ற வகையில் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிரதமர் மோடி தினமும் 18 மணி நேரம் உழைக்கிறார். கடந்த 20 வருடங்களில் அவர் ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததில்லை. ஆனால் ராகுல் காந்தி 2 மாதத்துக்கு ஒரு முறை விடுமுறை எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறார் என்று உள்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள அமித்ஷா கூறியிருந்தார் .
அதே போல், நான் இதுவரை விடுமுறை எடுத்ததையோ, ஒரு வாரம் காணாமல் போனதையோ அல்லது ஓய்விற்காக எங்காவது சென்றதையோ யாராவது கேட்டுள்ளீர்களா? நான் செய்யும் ஒவ்வொரு செயல், எடுக்கும் ஒவ்வொரு முடிவு குறித்தும், செய்யும் வேலை குறித்தும் கணக்கு காட்டி வருகிறேன் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டது நினைவிற்கூறியது.












Click it and Unblock the Notifications