வருமான வரி.! புதிய வரி முறையில் இருப்போர் கூட "இந்த" 5 விலக்குகள் பெறலாம்.. அட இது தெரியாம போச்சே
டெல்லி: நாளைய தினம் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் நிலையில், வருமான வரி தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.. வருமான வரியில் புதிய முறையில் இருப்போருக்குச் சலுகைகள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க வருமான வரியில் புதிய முறையில் இருப்போர் தற்போது பெறக்கூடிய விலக்குகள் குறித்து நாம் பார்க்கலாம்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் வருமான வரி சார்ந்து மேஜர் அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக புதிய முறையில் இருப்போருக்குப் பல சலுகைகள் வரலாம் எனச் சொல்லப்படுகிறது.

வருமான வரி புதிய முறை:
புதிய முறையில் இருப்போருக்கு ஏற்கனவே வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகமாக உள்ளது. இருப்பினும், அதில் பழைய முறையைப் போல வரி விலக்குகள் அதிகம் பெற முடிவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து கொண்டே இருக்கிறது. இருப்பினும், புதிய வரி முறையில் சில குறிப்பிட்ட தகுந்த வரி விலக்குகள் இருப்பதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்.
வருமான வரியில் புதிய வரி முறையைத் தேர்வு செய்வோர் இதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் வருமான வரியை மிச்சப்படுத்தலாம் என்றும் வல்லுநர்கள் கூறுகிறார்கள். அதென்ன வரி விலக்குகள்.. இதன் மூலம் புதிய வரி முறையில் எந்தளவுக்கு வரி விலக்கு பெற முடியும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நிலையான விலக்குகள்:
முதலில் இருப்பது நிலையான விலக்குகள் அதாவது ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் (STANDARD DEDUCTION). புதிய வரி முறையில் இருப்போராலும் நிலையான விலக்குகளை பெற முடியும். இந்த வருமான வரி விலக்கு தொகை கடந்த பட்ஜெட்டில் தான் ரூ.50,000இல் இருந்து ரூ.75,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. பழைய வரி முறையில் இருப்போருக்கு நிலையான விலக்குகள் மூலம் அதிகபட்சமாக ரூ.50,000 மட்டுமே வரி விலக்கு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிவு 80CCD(2)ன் கீழ், தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யும் போது அதில் நிறுவனங்களின் பங்களிப்புக்கு வரி விலக்கு பெற முடியும். அதேநேரம் பணியாளர்களின் பங்களிப்பிற்கு புதிய முறையில் வரி விலக்கு கிடைக்காது. பணியாளர்களின் பங்களிப்பிற்குப் பழைய முறையிலேயே வரி விலக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாற்றுத்திறனாளிகள்:
புதிய வரி முறையில் மாற்றுத்திறனாளிகள் போக்குவரத்து அலவன்ஸ் பெறலாம். இதன் கீழ் மாற்றுத்திறனாளிகள் வசிப்பிடத்திலிருந்து பணியிடத்திற்குச் செல்ல ஆகும் பயணச் செலவுக்கு வரி விலக்கு பெற முடியும்.
பணிக்கொடை:
புதிய வரி முறையில் கிராச்சுட்டி அதாவது பணிக்கொடைக்கும் வருமான வரி விலக்கைப் பெறலாம். கிராச்சுட்டி என்பது ஒருவர் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் வேலை செய்துவிட்டு வேலையில் இருந்து விலகும் போது தரப்படும் தொகையாகும். புதிய வரி முறையில் உள்ள அரசு ஊழியர் பெறும் பணிக்கொடைக்கு மொத்தமாக வரி விலக்கு தரப்படும். அதேநேரம் அரசு சாரா ஊழியர்கள் புதிய முறையில் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை மட்டுமே கிராச்சுட்டி பெற முடியும்.
பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் ஊழியர்கள் எடுக்காத லீவ் ( paid or privilege leave) அடுத்தாண்டிற்கு எடுத்து செல்லாம். ஓய்வு பெறும் போது, அந்த தொகையைப் பணமாக மாற்றிக்கொள்ள முடியும். புதிய வரி முறையின் கீழ், இதற்கு வரி விலக்கு இருக்கிறது. இருப்பினும், எவ்வளவு தொகைக்கு விலக்கு கிடைக்கும் என்பது அரசு மற்றும் தனியார்த் துறை ஊழியர்களுக்கு மாறுபடும்.












Click it and Unblock the Notifications