தேசியக்கொடி ஏற்றும்போது எதை செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்று தெரியுமா?
டெல்லி: தாய்த்திரு நாட்டின் 78 ஆவது குடியரசு தினம் நாளை கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில், வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் சுதந்திர தின கொண்டாட்டத்துக்கான பணிகள் களைகட்டத் தொடங்கியுள்ளன.
தேசியக்கொடி ஏற்றுவதற்கான முன்னேற்பாடுகள், கலை நிகழ்ச்சிகளுக்கான ஆயத்தப் பணிகள் என எங்கு பார்த்தாலும் பரபரப்பாகக் காணப்படுகிறது. தேசியக் கொடியை ஏற்றும்போது சில விதிமுறைகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அப்படி கடைப்பிடிக்காவிடில் அது நாட்டுக்கு அவமரியாதை இழைத்ததற்குச் சமம். தேசியக் கொடி ஏற்றும்போது எதையெல்லாம் செய்ய வேண்டும்... செய்யக் கூடாது.. என்று பார்க்கலாம் வாங்க..

செய்ய வேண்டியவை?
1. பொதுமக்கள், தனியார் அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பொருத்தமான அனைத்து நிகழ்ச்சிகளிலும் தேசியக் கொடியை அதன் கண்ணியம் குறையாமல் ஏற்றலாம், காட்சிப்படுத்தலாம்.
2. மரியாதை உணர்வுடன் கொடியை ஏற்ற வேண்டும். தேசியக் கொடியின் காவி நிறம் மேலே இருப்பதையும், பச்சை நிறம் கீழ் பகுதியில் இருப்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
3. பயன்படுத்தப்படாத சமயங்களில் தேசியக் கொடியை முக்கோண வடிவத்தில் நேர்த்தியாக மடித்து பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
4. தேசியக் கொடியை உயரமான இடத்தில் மட்டுமே ஏற்ற வேண்டும்.
5. கொடியேற்றும் விழாவில் பங்கேற்போர் தூய்மையான மற்றும் முறையான ஆடைகளை அணிய வேண்டும்.
6. பருத்தி நூல், கம்பளி நூல், பட்டு, காதி, பாலியஸ்டர் உள்ளிட்ட பொருத்தமான துணிகளில் நெய்யப்பட்ட தரமான கொடிகளைப் பயன்படுத்த வேண்டும்.
7. கொடியை ஏற்றும்போதும், இறக்கும்போதும் உரிய விதிகளைக் கடைப்பிடித்து சல்யூட் செலுத்த வேண்டும்.
8. சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளின்போது தேசியக் கொடியை ஏற்றலாம்.
செய்யக் கூடாதவை?
1. கொடியை ஆடையாகவோ, அலங்காரமாகவோ பயன்படுத்தக் கூடாது. கொடியை திரைசீலையைப் போல பயன்படுத்தக் கூடாது.
2. தேசியக்கொடி எப்போதும் தரையில் படக் கூடாது. நீரிலும் மிதக்கவிடக் கூடாது.

3. மூவர்ணக் கொடியுடன் மற்ற கொடிகளைப் பறக்கவிடக் கூடாது. தேசியக் கொடியை விட வேறு எந்தக் கொடியும் அல்லது பொருளும் உயரமாக வைக்கப்படக் கூடாது. சேதமடைந்த அல்லது சேதமாகும் கொடியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
4. சேதமடைந்த, மங்கிய கொடியை ஏற்றக் கூடாது. ஒளியூட்டப்படாமல் இரவில் கொடியை காட்சிப்படுத்தக் கூடாது.
5. தேசியக் கொடியில் எழுத்துகள் அல்லது டிசைன்களை அச்சிடக் கூடாது.
6. கொடியை சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை பறக்கவிட வேண்டும். மழை உள்ளிட்ட சாதகமற்ற வானிலையின் போது பறக்கவிடக் கூடாது.
7. கைக்குட்டைகள், தலையணைகள் உள்ளிட்டவற்றில் தேசியக் கொடியை அச்சிடக் கூடாது.












Click it and Unblock the Notifications