பிப்ரவரி 1ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது ஏன் தெரியுமா? காரணம் இதுதான்.. சுவாரசிய பின்னணி
டெல்லி: மத்திய பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இருப்பினும் பிப்ரவரி 1ம் தேதி ஏன் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதுபற்றி இங்கே பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டு அமைந்தது. அன்று முதல் இன்று வரை தொடர்ந்து அவரே பிரதமராக உள்ளார். இப்போது 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக செயல்பட்டு வருகிறார்.

2014, 2019 ஆண்டுகளில் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் கூட பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைத்தது. கடந்த ஆண்டு பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இப்போது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக மோடி செயல்பட்டு வருகிறார்.
இதன்மூலம் பிரதமர் மோடியின் 3.0 ஆட்சி தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் தான் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதன்பிறகு பொருளாதார ஆய்வறிக்கையை நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். இந்த பட்ஜெட்டில் வரி குறைப்பு, வெவ்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்கின்றனர். இதற்கிடையே தான் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதன் பின்னணி பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது நம் நாட்டில் தாக்கல் செய்யப்பட்டு வரும் மத்திய பட்ஜெட் காலத்துக்கு ஏற்ப தொடர்ந்து மாற்றங்களை சந்தித்து வருகிறது. 1999ம் ஆண்டு வரை மாலை 5 மணிக்கு தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வந்தது. பிரிட்டிஷ் இந்தியாவில் அமலில் இருந்த இந்த நடைமுறை இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் கூட மாறாமல் அப்படியே வழக்கத்தில் இருந்தது.
அதன்பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தான் பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரத்தை காலை 11 மணியாக மாற்றியது.1999-2000 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தாக்கல் செய்தார். இவர் தான் மாலை 5 மணிக்கு பதில் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையை கொண்டு வந்தார். தற்போது அந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது.
அதோடு கடந்த 2017 ம் ஆண்டுக்கு முன்பு 20 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய பட்ஜெட்டானது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் இறுதியில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் திடீரென்று கடந்த 2017ல் பட்ஜெட் தாக்கல் செய்வதில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதாவது பிப்ரவரி இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு பதில் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி 2017 ல் மறைந்த அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பிப்ரவரி 1ல் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
அன்று முதல் மத்திய பட்ஜெட் என்பது பிப்ரவரி 1ம் தேதியே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட் தேதி மாற்றத்தின் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதாவது பிப்ரவரி கடைசியில் பட்ஜெட் தாக்கல் செய்தால் புதிதாக பிறக்கும் நிதியாண்டான ஏப்ரல் 1ம் தேதிக்குள் பட்ஜெட் அறிவிப்பின் அம்சங்கள், விதிகளை பின்பற்ற போதிய காலஅவகாசம் இல்லை என்ற புகார் இருந்தது.
இதனை சரிசெய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு யோசித்தது. அதன்படியே பிப்ரவரி மாதம் இறுதிக்கு பதில் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நடைமுறை அமலுக்கு வந்தது. இதன்மூலம் பட்ஜெட் அறிவிப்பு தொடர்பான அம்சங்களை பின்பற்ற கூடுதல் காலஅவகாசம் அனைவருக்கும் கிடைக்கும். இதுதான் முக்கிய காரணமாகும்.
மேலும் நம் நாட்டில் ரயில்வேக்கு என்று தனி பட்ஜெட் இருந்தது. அதையும் பிரதமர் மோடி மாற்றினார். அதன்படி கடந்த 2017 ம் ஆண்டில் ரயில்வே தனி பட்ஜெட்டுக்கு பதில் பொது பட்ஜெட்டுடன் ரயில்வே துறை சார்ந்த அறிவிப்புகள் சேர்த்து வெளியிடப்பட்டது. இந்த பட்ஜெட்டையும் அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தான் நடைமுறைக்கு கொண்டு வந்தார்.












Click it and Unblock the Notifications