‛‛பயப்படாதீங்க பிரதமரே’’.. பேச்சு தொடங்கும்போதே எழுந்து போனால் எப்படி? சீண்டிய மஹுவா மொய்த்ரா
டெல்லி: லோக்சபாவின் முதல் கூட்டத்தொடரில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பேசினார். அவர் பேச தொடங்கியபோது பிரதமர் மோடி எழுந்து சென்ற நிலையில் ‛‛பயப்படாதீங்க பிரதமரே'' என அவர் கூறிவிட்டு தொடர்ந்து பிரதமரை சீண்டும் வகையில் கருத்து தெரிவித்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார். இந்த முறை தனி மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் கூட கூட்டணி கட்சி எம்பிக்கள் உதவியுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில் தான் புதிதாக தேர்வான எம்பிக்கள் லோக்சபாவில் பதவியேற்றனர். அதன்பிறகு சபாநாயகர் தேர்தல் நடத்தி ஓம்பிர்லா வெற்றி பெற்றார். அதன்பிறகு கடந்த 27 ம் தேதி லோக்சபா, ராஜ்யசபா எம்பிக்கள் மத்தியில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றினார்.
இதையடுத்து லோக்சபா, ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. இதையடுத்து நேற்று லோக்சபாவில் பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார். அதன்பிறகு லோக்சபா நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பதிலுரையாற்றினார். இதற்கிடையே தான் தற்போது இணையதளத்தில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் லோக்சபாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா பேச எழுகிறார். அப்போது பிரதமர் மோடி தனது இருக்கையில் இருந்து எழுந்து செல்கிறார். இதை பார்த்த மஹுவா மொய்த்ரா, ‛‛மரியாதைக்குரிய பிரதமரே, நான் உங்களுக்கு ஒரு கோரிக்கையை வைக்கிறேன். அடுத்த அரை மணிநேரம் நீங்கள் இங்கு அமர்ந்திருக்க வேண்டும். என்னுடைய பேச்சை கேட்டுவிட்டு செல்லுங்கள்'' என்றார். இதை கேட்ட பிரதமர் மோடி உடனடியாக தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்றார். இந்த வேளையில் அவர், ‛‛பயப்படாதீங்க. பிரசார வேளையில் 2 முறை என் தொகுதிக்கு வந்தீர்கள். இன்று என் பேச்சை கேளுங்கள்'' என கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோ தான் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள், மஹுவா மொய்த்ராவை பார்த்து அச்சமடைந்து பிரதமர் மோடி எழுந்து சென்றதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னொரு புறம் பிரதமர் மோடி எழுந்து சென்றபோது எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியும் இருக்கையை விட்டு எழுந்து சென்றார். அதுபற்றியும் கூறிய மஹுவா மொய்த்ரா, ‛‛பரவாயில்லை. அவர் எனது எதிர்க்கட்சி தலைவர். அவர் நான் பேசுவதை ஏற்கனவே கேட்டுள்ளார்'' என்று தெரிவித்தார்.
முன்னதாக மஹுவா மொய்த்ராவுக்கு முன்பு ராகுல் காந்தி பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதன்பிறகு மஹுவா மொய்த்ரா பேசி தொடங்கியபோது தான் பிரதமர் மோடி தனது இருக்கையில் இருந்து எழுந்து வெளியே சென்றார். மேலும் மஹுவா மொய்த்ரா, ‛‛கடந்த முறை நான் இங்கு வந்தபோது பேச அனுமதிக்கப்படவில்லை. ஒரு எம்பியை வாயடைக்க வைக்க ஆளும் கட்சி பெரும் விலை கொடுத்துள்ளது. என்னை அடக்க முயன்று 63 உறுப்பினர்களை இழந்துள்ளனர்.
மக்கள் ஜனநாயகத்தால் பாஜகவின் ஆட்சி பலவீனமடைந்துள்ளது. இது ஒரு நிலையான அரசு அல்ல. இது பல கட்சிகளை நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பல சவால்களை எதிர்கொண்ட நாங்கள் இந்த முறை 234 உறுப்பினர்களுடன் (எதிர்க்கட்சி எம்பிக்கள்) பலமாக இருக்கிறோம். இதனால் கடந்த முறையை போல் எங்களை நடத்த முடியாது'' என விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications