10 மாதங்களுக்கு பின் 'சர்ச்சைக்குரிய' தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய தலைவராக பிஎன் கங்காதர் நியமனம்
டெல்லி: தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய தலைவராக டாக்டர் பி என் கங்காதர் 10 மாதங்களுக்குப் பின் நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவ மதிப்பீடு மற்றும் தரவரிசை வாரியத்தின் தலைவரும் தேசிய மருத்துவ ஆணையத்தின் பொறுப்பு தலைவராகவும் பதவி வகித்த டாக்டர் பி என் கங்காதர் தற்போது தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய மருத்துவ ஆணையத்தின் முதல் தலைவராக டாக்டர் சுரேஷ் சந்திர ஷர்மா பதவி வகித்து வந்தார். இவரது பதவிக் காலம் கடந்த ஆண்டு செப்டம்பரில் நிறைவடைந்தது. இதனையடுத்து டாக்டர் பிஎன் கங்காதர், பொறுப்பு தலைவராக செயல்பட்டு வந்தார். தேசிய மருத்துவ ஆணையத்துக்கு முழு நேர அதாவது புதிய தலைவர் நியமிக்கப்படாமல் இருந்தது சர்ச்சையானது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமும் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நிலையில் தேசிய மருத்துவ ஆணையத்திற்கும், தன்னாட்சி வாரியங்களுக்கும் பல்வேறு நபர்களை அமைச்சரவையின் நியமனக்குழு நியமித்துள்ளது. இந்த நியமனங்கள் 4 ஆண்டு காலத்திற்கு, நியமிக்கப்பட்டவர் 70 வயதை அடையும் வரை, மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை- இவற்றில் எது முந்தையதோ அதுவரை செல்லத்தக்கதாகும்.
புதிய நியமனங்கள் விவரம்:
- மருத்துவ மதிப்பீடு மற்றும் தரவரிசை வாரியத்தின் தலைவரான டாக்டர் பி என் கங்காதர் தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரைத்திருநாள் மருத்துவ விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பக் கழக இயக்குநர் டாக்டர் சஞ்சய் பிகாரி, மருத்துவ மதிப்பீடு மற்றும் தரவரிசை வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- மும்பையில் உள்ள அப்போலோ மருத்துவமனையின் இயக்குநர் (புற்றுநோயியல்) டாக்டர் அனில் டி குரூஸ், முதுநிலை மருத்துவக் கல்வி வாரியத்தின் முழுநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- மும்பையில் உள்ள டாடா நினைவு மையத்தின் முன்னாள் பேராசிரியர் டாக்டர் ராஜேந்திர அச்யுத் பாட்வே, இளைநிலை மருத்துவக் கல்வி வாரியத்தின் பகுதி நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் 2 ஆண்டு காலத்திற்கு, 70 வயதை அடையும் வரை, மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை- இவற்றில் எது முந்தையதோ அதுவரை செல்லத்தக்கதாகும்.
தேசிய மருத்துவ ஆணையம்: நாட்டின் மருத்துவ கல்லூரி சேர்க்கை, மருத்துவ கல்லூரி இடங்கள் ஆகியவை குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கக் கூடியதுதான் தேசிய மருத்துவ ஆணையம்.
தேசிய மருத்துவ ஆணையத்தின் சர்ச்சைகள்: தேசிய மருத்துவ ஆணையம் பிறப்பித்த புதிய வழிகாட்டுதல்கள், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளே திறக்க முடியாது என்கிற நிலைமை உருவாகி எதிர்ப்பை எதிர்கொண்டது. டாக்டர் பிஎன் கங்காதர் தற்காலிக தலைவராக பதவி வகித்த காலத்தில் உயிரியல் பாடமே படிக்காதவர்கள் மருத்துவ படிப்பில் சேரலாம் என்பதாக தகவல்கள் வெளியாகி பின்னர் விளக்கம் தரப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேசிய மருத்துவ ஆணையத்தின் லோகோவில் இருந்த அசோக சக்கரம் நீக்கப்பட்டு இந்து கடவுளான 'தன்வந்திரியின்' படம் வைக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications