டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு..முழு எமெர்ஜென்சி பிறப்பித்த அதிகாரிகள்..என்னாச்சு?
டெல்லி: டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட சரக்கு விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது பறவை மோதியது. பறவை மோதியதில் விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக இயங்கக் கூடிய விமான நிலையங்களில் ஒன்றாகும்.
இந்த விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 10.45 மணியளவில் துபாய்க்கு FedEx- என்ற விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சரக்கு விமானம் புறப்பட்டு சென்றது.

அவசர தரையிறங்க அனுமதி
விமானம் ஆயிரம் அடி உயரத்தில் நடு வானில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விமானத்தின் கண்னாடியில் பறவை மோதியது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை டெல்லி விமான நிலையத்திற்கே திருப்பி தரையிறக்க விமானி முடிவு செய்தார். இதையடுத்து உடனடியாக விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டு விமானம் அவசர தரையிறங்க அனுமதி கேட்டார்.

விமானத்தை ஆய்வு செய்தனர்
தொடர்ந்து விமான நிலையத்தில் முழு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு விமானம் தரையிறங்க அனுமதி கொடுக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் தொழில் நுட்ப குழுவினர் விரைந்து சென்று விமானத்தை ஆய்வு செய்தனர். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் முடிந்த பிறகு விமானம் மீண்டும் நண்பகல் 1.40 மணிக்கு துபாய் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

பறவைகள் மோதுவதால்
விமானத்தில் பறவைகள் மோதுவது என்பது மிகவும் சாதாரண ஒன்றாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் பறவைகள் மோதுவதால் உரிய பாதுகாப்பு பரிசோதனை செய்யாவிட்டால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் அபாயமும் இருப்பதால் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த ஆகாஷா ஏர் விமானம் பறவை மோதியதால் மும்பைக்கு அவசரமாக திருப்பி விடப்பட்டது.

மோசமான வானிலை காரணமாக
அதேபோல், அண்மையில் சூரத்தில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பறவை மோதியதால் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. பறவை மோதியதில் விமானத்தின் என்ஜின் பிளேடும் சேதம் அடைந்து இருந்தது. கடந்த சில தினங்களாக டெல்லியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பயணிகள் விமானம் பலவும் அடிக்கடி திருப்பி விடப்பட்டு இருந்தது. கடந்த வியாழக்கிழகை மோசமான வானிலையால் டெல்லி விமான நிலையத்தில் இருந்து 22 விமானங்கள் திருப்பி விடப்பட்டு இருந்தன.












Click it and Unblock the Notifications