மூச்சு திணறும் டெல்லி! பள்ளிகளுக்கு 19ம் தேதி வரை விடுமுறை.. இயல்பு நிலை எப்போது திரும்பும்?
டெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், தீபாவளி காரணமாக மாசு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. எனவே மாணவர்களுக்கு விடப்பட்டுள்ள விடுமுறை 19ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கி ஜனவரி மாதம் வரை வழக்கமாக டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கும். அதேபோல இந்த முறையும் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. பொதுவாக காற்றில் மாசு 201-300 வரை இருந்தால் அது மோசமான, சுவாசிக்க ஏற்றதக்க காற்று அல்ல. ஆனால் டெல்லியில் கடந்த வாரம் முழுவதும் 400ஐ தாண்டி காற்று மாசு பதிவாகியிருந்தது. இதனால் மருத்துவமனையை நோக்கி படையெடுப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

நிலைமையை சமாளிக்க லோதி சாலை பகுதியில் டெல்லி மாநகராட்சி சார்பில் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல மாசு மேலும் அதிகரிக்காமல் இருக்க BS3 மற்றும் BS4 வாகனங்கள் டெல்லிக்குள் இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி எனப்படும் கேஸ் மூலமாக இயங்கும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல சாலையில் செல்லும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையை 50% குறைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில், பதிவெண் அடிப்படையில் ஒற்றைப்படை, இரட்டைப்படை என வாகனங்கள் இயங்க புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் இது தொடர்பான வழக்கில், இந்த ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகன இயக்கம் என்பது காற்று மாசை குறைக்கும் என்பதற்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. அதேபோல டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசங்களில் பயிர் கழிவுகளை எரிக்க தடையும் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக தர குறியீட்டில் 400ஐ தாண்டி பதிவாகியிருந்த காற்று மாசு நேற்று 356 என குறைந்திருக்கிறது.
இருப்பினும் 50-100 என இருந்தால் மட்டுமே அது சுவாசிக்க ஏற்ற காற்று என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். காற்று மாசிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் விதமாக தொடக்கப் பள்ளி மாணவர்கள் தொடங்கி 11ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் வரும் 11ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த விடுமுறை 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.
டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டாலும் காற்று மாசின் அளவு கணிசமான அளவில் மீண்டும் உயரக்கூடும். எனவே இதிலிருந்து மாணவர்களை காக்கும் விதமாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக டிசம்பர்-ஜனவரி மாதங்களில் டெல்லியில் குளிர் உச்சத்தை தொடும். எனவே மாணவர்களுக்கு விடுமுறை விடப்படும். இந்த குளிர்கால விடுமுறை முன்கூட்டியே தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
காற்று மாசு காரணமாக சுமார் 2 கோடி மக்கள் கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 50% பேரை வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. நாளை டெல்லியில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. எனவே ஓரளவு காற்று மாசு குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications