டெல்லியை மிரட்டும் மழை.. மீண்டும் உயரும் நீர் மட்டம்! மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்
டெல்லி: சமீபத்தில் வடமாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக டெல்லியில் வரலாறு காணாத அளவு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில நாட்களாக இந்த வெள்ளம் வடிந்த நிலையில், இன்று மீண்டும் அபாய கட்டத்தை எட்டியுள்ளது.
ஹரியானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓட தொடங்கியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அதேபோல ஹரியானாவில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஹத்னி குந்த் தடுப்பணையும் அதன் முழு கொள்ளளவை எட்டியதால் அதிலிருந்து தண்ணீர் யமுனை நதியில் திறந்துவிடப்பட்டது. இது டெல்லிக்கு புதிய தலைவலியை உருவாக்கியது.

யமுனையில் நீர் மட்டம் உயர உயர அதன் கரையில் அமைந்துள்ள டெல்லி கொஞ்சம் கொஞ்சமாக மூழ்க தொடங்கியது. கடந்த ஒரு சில நாட்களில் டெல்லியின் முக்கிய இடங்களில் நீர் சூழ தொடங்கிவிட்டது. இப்படியாக சூழ்ந்த நீர் வெளியேறாமல் டெல்லியை ஸ்தமிக்க வைத்திருக்கிறது. இது குறித்து மக்கள் கூறுகையில், கடந்த 45 ஆண்டுகளில் இப்படிப்பட்ட வெள்ளத்தை பார்த்ததில்லை என்று குறிப்பிடுகின்றனர். கடைசியாக கடந்த 1978ம் ஆண்டு டெல்லி யமுனையின் நீர் மட்டம் 207.49 மீட்டராக இருந்தது. ஆனால் இந்த முறை 208 மீட்டரை கடந்துள்ளது.
இதன் காரணமாக மத்திய டெல்லியில் உள்ள ஐடிஓ, ராஜ்காட் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. ஹனுமான் மந்திர், யமுனா பஜார், கீதா காலனி, சிவில் லைன்களுக்கு வெளியே உள்ள ரோடுகளிலிலும் நீர் தேங்கியுள்ளது. அவ்வளவு ஏன் உச்சநீதிமன்ற வளாகத்தில் கூட நீர் தேங்கிவிட்டது. நாலா புறமும் நீ்ர் சூழ்ந்ததால் அதை வெளியேற்ற முடியாமல் சுகாதார ஊழியர்கள் திணறினர். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக வெள்ளம் ஓரளவு குறைந்து டெல்லி மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது.
ஆனால் தற்போது மீண்டும் மழை தொடங்கியுள்ளதால் இந்த நீர் மட்டம் மீண்டும் உயர தொடங்கியுள்ளது. நேற்று இது 205.96 மீட்டராக இருந்த நிலையில், இன்று 206.56ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ தொடங்கியுள்ளது. இங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல நீர் மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது இன்று இரவு மேலும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதை டெல்லி மாநகராட்சி உறுதி செய்து வருகிறது. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications