பா.ஜ.க வேட்பாளரின் காரில் இவிஎம் மெஷின்: 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்.. மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவு!
டெல்லி: அசாமில் பா.ஜ.க வேட்பாளரின் காரில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் 4 தேர்தல் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
மேற்கு வங்க மாநிலத்தில் 30 தொகுதிகளுக்கும், அஸாமில் 39 தொகுதிகளுக்கும் நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் நடந்தது. பின்னர் பதார்கண்டி தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டது.
அவ்வாறு கொண்டு செல்லும் வழியில் அசாமின் கரீம்காஞ்ச் பகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏவும், பத்ரகாண்டி தொகுதி வேட்பாளருமான கிருஷ்னெந்து பாலின் காரில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரிய முறைகேடு நடக்கிறது. தேர்தல் ஆணையம் இதை கண்டுகொள்ளவில்லை என்று பலரும் கண்டனம் தெரிவித்தனர்.காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தியும் தேர்தலின்போது ஒவ்வொரு முறையும் இதுபோல் நடக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக 4 தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் பணி இடைநீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் டுவிட்டரில் கூறுகையில், 'வாக்குச்சாவடியிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாகனத்தில் எடுத்துச் சென்றபோது, ஒரு கும்பல் அந்த வாகனத்தை சேதப்படுத்தியது. இதனால் அந்த வழியாக வந்த தனியாருக்குச் சொந்தமான ஜீப்பில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஏற்றிச் செல்லப்பட்டன. ஆனால், நீண்டநேரத்துக்குப் பின்னர்தான் அந்த ஜீப் பாஜக வேட்பாளருடையது என்பது தெரிந்தது" எனத் தெரிவிக்கப்பட்டது.