சட்ட விரோதமாக வெளிநாட்டு நிதியை பெற்ற ஆம் ஆத்மி.. தேர்தல் நெருங்கும் நேரத்தில் ED பரபர குற்றச்சாட்டு
டெல்லி: கடந்த 2014 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி விதிகளை மீறி ரூ.7.08 கோடியை வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றுள்ளதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் ஆம் ஆத்மியின் பல்வேறு தலைவர்களையும் அமலாக்கத் துறை கைது செய்தது. குறிப்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூட மார்ச் மாதம் கைதானார்.

சுமார் 2 மாதங்கள் சிறையில் இருந்த அவருக்குத் தேர்தல் பிரச்சாரத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. இருப்பினும், அவருக்கு ஜாமீன் வழங்கவே கூடாது என அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது இருந்தது.
ஆம் ஆத்மி: இதற்கிடையே ஆம் ஆத்மி மீது அமலாக்கத் துறை மற்றொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. உள் துறை அமைச்சகத்திடம் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள ரிப்போர்ட்டில் கடந்த 2014 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி விதிகளை மீறி ரூ.7.08 கோடியை வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் ஓமன் நாடுகளில் பல நன்கொடையாளர்களிடமிருந்து ஆம் ஆத்மி நன்கொடை பெற்றதுள்ளதாக அமால்கக துறை தெரிவித்துள்ளது.. மே 25ஆம் தேதி டெல்லியில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், இப்போது இந்த ரிப்போர்ட் வெளியாகியுள்ளது பேசுபொருள் ஆகியுள்ளது.
முறைகேடு: வெளிநாட்டு நன்கொடை பெறுவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், பல ஆம் ஆத்மி தலைவர்களின் பெயர்களும் இந்த ஆவணத்தில் இடம் பிடித்துள்ளது. குறிப்பாக 2016இல் கனடாவில் நடந்த நிதி திரட்டும் நிகழ்வின் போது சேகரிக்கப்பட்ட நிதியை ஆம் ஆத்மி எம்எல்ஏ துர்கேஷ் பதக் உட்பட சிலர் ஏமாற்றியதாகவும் அந்த நிதியைத் தனிப்பட்ட நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி ஓவர்சீஸ் இந்தியா ஒருங்கிணைப்பாளர் அனிகேத் சக்சேனா, முன்பு ஆம் ஆத்மி வெளிநாட்டு கன்வீனராக இருந்த குமார் விஸ்வாஸ், அப்போது ஆம் ஆத்மியில் இருந்த கபில் பரத்வாஜ் துர்கேஷ் பதக் ஆகியோர் பெயர்கள் இதில் இடம்பெற்றுள்ளது. இரு தரப்பிற்கும் இடையே நடந்த மெயில் உரையாடல்கள் முறைகேடு நடந்ததாகச் சாட்சியாக இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
நன்கொடை விவரங்கள் மறைப்பு: அமெரிக்கா மற்றும் கனடாவில் நிதி திரட்டும் நிகழ்ச்சிகளின் மூலம் எவ்வளவு தொகை சேகரிக்கப்பட்டது.. அதை அளித்தவர்கள் யார் என்பதை வெளிநாட்டு நன்கொடை சட்டத்தின் கீழ் தெரியப்படுத்த வேண்டும். ஆனால், அதை ஆம் ஆத்மி மறைத்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஒரே பாஸ்போர்ட் எண், மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளை வைத்துப் பல பேரிடம் இருந்த ஆம் ஆத்மி நன்கொடை பெற்றுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதற்கிடையே இந்த குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி முழுமையாக நிராகரித்துள்ளது. கெஜ்ரிவாலை கண்டு மோடி அஞ்சுவதாகவும் இதனால் தான் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மியின் அதிஷி குற்றம்சாட்டினார்.
ஆம் ஆத்மி பதிலடி: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இது அமலாக்கத் துறை நடவடிக்கை இல்லை.. பாஜகவின் நடவடிக்கை. இது பல ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு.. ஏற்கனவே இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை, சிபிஐ, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் இதற்கான விளக்கத்தைக் கொடுத்துவிட்டோம்.
இருப்பினும், ஆம் ஆத்மி மீது அவப்பெயரை ஏற்படுத்த மோடி இந்த சதி செய்து இருக்கிறார்.. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் பாஜக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளது. வரும் நாட்களில் மேலும் பல புதிய புகார்கள் சொல்வார்கள் பாருங்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications