ஆடிப்போன ஆம்ஆத்மி.. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்.. டெல்லியில் பரபர
டெல்லி: டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 21 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை கூறியுள்ளது.
டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். கடந்த 2021 -ம் ஆண்டு நவம்பரில் அங்கு புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. அதில் ஊழல், முறைகேடு புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஆளுநர் விகே சக்சேனா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். சிபிஐ விசாரணை தொடங்கிய நிலையில் டெல்லி அரசு புதிய மதுபான கொள்கையை திரும்ப பெற்றது.

அப்போது டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழலில் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றங்கள் நடந்தது, இந்த ஊழல் மூலம் கிடைக்கும் பணத்தை தேர்தலுக்கு ஆம்ஆத்மி கட்சி பயன்படுத்தியதையும் சிபிஐ கண்டுபிடித்தது. இதையடுத்து அமலாக்கத்துறையும் இந்த வழக்கை கையில் எடுத்தது.
இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்தூறை சம்மன் அனுப்பியது. ஆனால் தேர்தல் பிரசாரத்தை காரணம் காட்டி கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
வரும் 21 ஆம் தேதி வியாழக்கிழமை ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பட்டுள்ளது. சம்மன்கள் அனுப்பப்பட்டு ஒரு நபர் மூன்று முறை ஆஜராகாமல் இருந்தால் அதன்பிறகு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டை அமலாக்கத்துறையால் பிறப்பிக்க முடியும். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை இரண்டாவது முறையாக கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது ஆம் ஆத்மி கட்சியை அதிர வைத்துள்ளது.
கெஜ்ரிவால் கைதானால் சிறையில் கேபினட் கூட்டத்தை நடத்துவோம் என்று ஏற்கனவே அந்தக் கட்சியினர் கூறியிருந்தனர். இந்த நிலையில், இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என கெஜ்ரிவால் விமர்சித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications