அரவிந்த் கெஜ்ரிவால்.. 7-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்.. பிப்.26-ல் ஆஜரா? கைது செய்யப்படுவாரா?
டெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பிப்ரவரி 26-ந் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. பிப்ரவரி 26-ந் தேதி கெஜ்ரிவால் ஆஜராவாரா? அப்படி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜரானால் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் போல கைது செய்யப்படுவாரா? என்கிற பரபரப்பு நிலவுகிறது.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கை பெரும் சர்ச்சையானது. இதனால் இந்த கொள்கையை ஆம் ஆத்மி அரசு திரும்பப் பெற்றது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கு இது பெரும் நெருக்கடியானது.

புதிய மதுபான கொள்கையில் ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளது; சட்டவிரோதப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது என்பது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு. டெல்லி மாநில துணை நிலை ஆளுநரின் அறிக்கையின் படி இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மொத்தம் ரூ2,800 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டது என்பதும் குற்றச்சாட்டு.
இந்த வழக்கில்தான் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் எம்.பி உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். இதே வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அமலாக்கத்துறை ஏற்கனவே 6 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் 6 முறையும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
அமலாக்கத்துறை முன்பு ஆஜரானால் தாம் கைது செய்யப்படுவோம் என்பது அரவிந்த் கெஜ்ரிவால் நிலைப்பாடு. இதனால் தாம் கைது செய்யப்பட்டால் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்தும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தி முடிவெடுத்துள்ளார். தமது கைதுக்குப் பின்னர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு டெல்லியில் புதிய ஆட்சி அமைக்க பாஜக முயற்சிக்கிறது எனவும் குற்றம்சாட்டினார் அரவிந்த் கெஜ்ரிவால். இதனாலேயே அண்மையில் டெல்லி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பையும் நடத்தி வெற்றி பெற்றார் கெஜ்ரிவால்.
இந்த நிலையில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 7-வது முறையாக சம்மன் அனுப்பி இருக்கிறது அமலாக்கத்துறை. வரும் 26-ந் தேதி அமலாக்கத்துறை முன்பாக அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக வேண்டும் என்பது சம்மன் உத்தரவு.
இதேபோல ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனுக்கு 10 முறை சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை. இரு முறை மட்டுமே ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார். இதன் பின்னர் ஹேமந்த் சோரனை கைது செய்தது அமலாக்கத்துறை. இதனால் முதல்வர் பதவியில் இருந்து ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ய, புதிய முதல்வராக சாம்பாய் சோரன் பதவியேற்றார். இதனால் தாமும் ஹேமந்த் சோரன் போல கைது செய்யப்படலாம் என்பது அரவிந்த் கெஜ்ரிவால் அச்சம். இதனால் பிப்ரவரி 26- ந் தேதி அமலாக்கத்துறையின் 7-வது சம்மனை ஏற்று கெஜ்ரிவால் ஆஜராவாரா? இல்லையா? என்பது எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications