போராட்டக்காரரை மிதிக்கும் போலீஸ்.. வைரலாகும் பரபரப்பு படம்.. இது உண்மையா.. ?
பழைய போட்டோவை பதிவிட்டு கலவரத்தை திசை திருப்பும் வேலை நடக்கிறது
டெல்லி: இளைஞர் ஒருவரின் கழுத்தில் பூட்ஸ் காலால் வைத்து போலீசார் மிதிப்பது போன்ற போட்டோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், வைரலாகி வரும் அந்த போட்டோவுக்கும், டெல்லி போராட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று தெரியவந்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. போன ஞாயிறு முதல் இந்த போராட்டம் வெடித்து கிளம்பி உள்ளது.
இதனால் வன்முறைகளும் நடந்தன.. போலீசார் நடத்திய தடியடி பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. மேலும் நாடு முழுவதும் ஒருவித பரபரப்பு சூழல் காணப்படுகிறது. இந்நிலையில், சோஷியல் மீடியாவில் ஒரு போட்டோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு இளைஞரை கீழேபோட்டு, அவர் கழுத்தில் ஒரு போலீஸ்காரர் காலை வைத்து மிதிப்பது போல அந்த போட்டோ உள்ளது. ஜாமியா மாணவர்களின் போராட்டத்தில் போலீசாரின் செயல்பாடு எப்படி உள்ளன என்ற கேள்வியுடன் இந்த போட்டோ பெருமளவு ஷேர் செய்யப்பட்டது.
தனியாக சிக்கிக் கொண்ட போலீஸ்காரர்.. சூழ்ந்த போராட்டக்காரர்கள்.. லத்தியை பிடுங்கி அடி.. ஷாக் வீடியோ
இதை பார்த்து பலரும் அதிர்ச்சியாயினர். ஆனால், இந்த போட்டோ போலி என்றும், 8 வருஷத்துக்கு மன்பு, லக்னோவில் எடுக்கப்பட்ட போட்டோ என்றும் தெரிய வந்துள்ளது.. ஜாமியா போராட்டத்திற்கும் இந்த போட்டோவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
"போலி செய்திகளை பரப்பாதீர்கள்... உண்மைத்தன்மை தெரியாமல் எதையும் சோஷியல் மீடியாவில் பரப்ப வேண்டாம்... போலி செய்திகளால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது" என்று காவல்துறை எச்சரித்திருந்ததும், வேண்டுகோள் விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. மின்னுவதெல்லாம் பொன் அல்ல என்பது போல இதுபோன்ற வைரலாகும் விஷயங்கள் எல்லாமே உண்மையும் அல்ல என்பதற்கு இந்த போட்டோ ஒரு உதாரணம்.